தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
தாய்மை யாதெனில்… EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


தாய்மை யாதெனில்…

Go down

தாய்மை யாதெனில்… Empty தாய்மை யாதெனில்…

Post by இறையன் Sun Dec 18, 2011 3:51 pm

தாய்மை யாதெனில்… Yuvan
யுவன் சந்திரசேகர்

ஐரீனை உங்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஐரீன் என்ற பெயரில் தெரிந்திருக்காது, ஒருவேளை. கொஞ்சகாலம் எங்களுக்குள் ஒருவித அபிமானம் நிலவியது. பிறகு ஒருவருக்கொருவர் எட்டாத தொலைவுக்குப் போய்விட்டோம். அவளை என்னால் என்றுமே மறக்க முடியாது. ஐரீனுக்கு என்னை நினைவிருக்குமா, அதுவும் அவளுடைய தற்போதைய சூழ்நிலையில், என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

நான் சென்னைக்கு மாற்றலாகி வரும்போது இருபத்தோரு வயது இளம்பெண் அவள். இருபது வருடங்கள் தொடர்ந்து பணிசெய்து, ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பியிருக்கிறேன் – அவளுக்கு இப்போதுதான் முப்பது வயது ஆகியிருக்கிறது. அவர்கள் வட்டாரத்தில் இளமை அவ்வளவு சீக்கிரம் முடிவதில்லை.

1989- 90 வாக்கில் நான் சென்னைக்கு வந்தேன். குழந்தைகளின் படிப்பை உத்தேசித்து. புதிதாகப் பறித்த ரோஜா மாதிரி எனக்குப் பக்கத்து இருக்கையில் ஐரீன் பெர்நார்டு. மெலிதான நறுமணத்துடன் வந்து உட்கார்வாள். அவளுக்கு இடதுபுறம் என்னுடைய கூண்டு. நான் காசாளராக இருந்தேன். அவள் எழுத்தர்.

ஆங்கிலோ இந்தியப் பெண் என்றாலும் பிடிவாதமாக தினசரி பருத்திப் புடவைகள் அணிந்து வருவாள ஐரீன். இடது தோளில் சிறகுபோல விறைத்து நீண்டிருக்கும் புடவை விளிம்பு. மார்க் கதுப்பு அவ்வப்போது பார்வையில் பட்டுத் தொந்தரவு செய்யும்.

ஆனால், பேசும்போது அவள் கண்களில் மலரும் வெகுளித்தனம் எனக்குள் அந்தக் கணம் வரை சேர்ந்திருக்கும் கசடுகளைப் பொசுக்கிக் கருக்கிவிடும். பத்தாம் வகுப்புப் படிக்கும் என் மூத்த மகள் ஒரே கணத்தில் முழுசாக விளைந்து பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்துவிட்ட மாதிரி உணர்வேன். கடுமையான குற்ற உணர்ச்சியில் மனம் குமையும்.

நல்லவேளை, இந்த அவஸ்தை அதிக காலம் நீடிக்கவில்லை. மிகச் சரியாக ஒன்றரை வருடம். ஐரீன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டுப் போனாள். அந்த இடத்துக்கு ஆராவமுதன் வந்து சேர்ந்தார். இளைஞர்களெல்லாம் சிகரெட் பான் பராக் என்று நவீனமடைந்து வந்த காலகட்டத்தில் இவர் மட்டும் பிடிவாதமாகப் பொடி போட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக, இந்தப் பழக்கம் உடையவர்கள் வலது கையைத்தான் பயன்படுத்துவார்கள் அல்லவா? என் தலையெழுத்து, ஆராவமுது இடதுகைப் பழக்கம் உடையவர்.

தினவெடுத்ததும் லெட்ஜரை நிதானமாக முன்னால் தள்ளி வைத்துவிட்டு – கணிப்பொறிகள் சரளமாகப் புழக்கத்துக்கு வந்திராத நாட்கள் அவை – நாசித்துவாரங்களில் பொடியைக் கெட்டித்துவிட்டு இடது கையை உதறுவார். என் கண்களில் நீர் நிரம்பிவிடும். ஐரீனின் ஞாபகம் காரணமா, மிச்சப் பொடி காரணமா என்று என்னால் ஒரு முடிவுக்கு வர முடிந்ததேயில்லை.

ஐரீன் இருந்த நாட்களில், நானும் அவளும் ஒன்றாகத்தான் மதிய உணவுக்குப் போவோம். தாளித்துக்கொட்டிய தயிர் சாதத்தையும் மோர் மிளகாயையும் உருட்டி, கவளம் கவளமாக நான் விழுங்கும்போது, விரல்களில் ஈரம் படியாமல் ரொட்டித்துண்டுகளை எடுத்து மெல்லுவாள் அவள். கிட்டத்தட்டக் கழிவறைக் கோப்பையின் சாயலில் இருக்கும் வாஷ்பேஸினில் நான் கையையும் எவர்சில்வர் டப்பாக்களையும் கழுவிக்கொண்டு வருவேன். கைப்பையிலிருந்து எடுத்த டிஷ்யூ காகிதத்தால் சாயம் கலைந்துவிடாதவண்ணம் நாசூக்காக உதடுகளை ஒற்றியெடுப்பாள் ஐரீன்.

அடுத்த பத்து நிமிடங்கள் பல்வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருக்கைக்குத் திரும்ப நாங்கள் முடிவெடுக்கவும், நிறை கர்ப்பம் போன்ற தொந்தி ஐந்து அடுக்கு டிபன் கேரியர் மற்றும் பெருத்த ஓசையெழுப்பும் ஏப்பத்துடன் மாணிக்கவாசகம் சாப்பாட்டு அறைக்குள் நுழையவும் சரியாக இருக்கும்.

ஒருநாள் எங்கள் வாடிக்கையாளப் பெண்மணி ஒருத்தி பற்றிப் பேச்சு வந்தது. எப்போதுமே அதீதமான ஒப்பனையுடன் வருபவள் அவள். எரிக்கும் நிறங்களில் சேலை. அநியாயத்துக்குக் குதி உயர்ந்த காலணி. வரும்போதை விட, போகும்போது மேலும் விகாரமாகத் தெரியும் நடை. அவள் வங்கிக்குள் நுழைந்தவுடன் நானும் ஐரீனும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொள்வோம்.

அன்று எங்கள் புன்னகை பாதியில் உறைந்துவிட்டது. அந்தப் பெண்மணி தன்னுடன் அழைத்து வந்திருந்த சிறுவன்தான் காரணம். பெரிதாக ஓலமிட்டவாறு உள்ளே வந்தான் அவன். தலை ஒரு நிலையில் நிற்காமல் சதா சுழன்றுகொண்டிருந்தது. சின்னஞ்சிறிய, சப்பை மூக்கு. கீறல்போல் இடுங்கிய, பீழை கோத்த கண்கள். ஓசையெழுப்புவதற்காகத் திறந்த வாயில் பாதி மென்ற எதுவோ வெண்ணிறமாக நுரைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பெண்மணியின் புடைவையை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தான். பள்ளிச் சீருடை அணிந்திருந்தான்.

மாணிக்கவாசகத்தின் இருக்கையில் சென்று டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசை நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். அந்தப் பையன் உரத்துக் கூவுவான். இவள் சிரித்த முகத்துடன் அவனிடம் ஏதோ சொல்லி சமாதானம் செய்வாள். இரண்டு விநாடி கழித்து அவன் மறுபடியும் ஓலமிடுவான். அவனுடைய கால்சட்டையில் ஈரம் படிந்திருந்ததை சற்று தாமதமாகத்தான் கவனித்தேன்.

மாணிக்கவாசகத்தால் சுறுசுறுப்பாகவும் வேலை பார்க்க முடியும் என்பதை அன்று அறிந்துகொண்டேன். சீக்கிரமே அந்தப் பெண்மணியின் காசோலை என்னிடம் வந்துவிட்டது. டோக்கன் எண் சொல்லி நான் அழைத்ததும் பையனையும் நடத்திக்கொண்டு கூண்டுக்கு அருகில் வந்தாள். மூத்திர நாற்றம் துளைத்தது. பணத்தை வாங்கும்போது அவளாகவே சொன்னாள்:

புது எடம்ங்குறதாலே பயப்புடுறான். இல்லாட்டி இவ்வளவு சத்தம் போட மாட்டான்.

நானும் உபசாரமாக ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டுமே என்று கேட்டேன்:

பள்ளிக்கூடம் போறானாம்மா?

ஆமா சார். கூப்புடப் போற ஆயா இன்னைக்கி வரலே. அதான் நான் போயிட்டு நேரா பேங்க்குக்கு வர வேண்டியதாயிருச்சு. நீங்க ஒரு மணிக்கிக் குளோஸ் பண்ணிருவீங்களே?

பையனை நடத்திக் கூட்டிக்கொண்டு போனாள். அவன் மழலையாக ’ம்மா, ம்மா’ என்று அழைத்து ஏதோ கேட்பதையும், இவள் குனிந்து அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே போவதையும் அந்த ஹாலில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்கள். கதவுக்கு அருகில் நின்று பையன் திரும்பிப் பார்த்தான். அத்தனைபேருக்கும் கையாட்டி விடைசொல்லிவிட்டு வெளியில் போனான் – அம்மாவின் புடைவையைப் பிடித்த பிடி விலகாமல்….

அந்தம்மா மேக்கப்பெப் பாத்து இவ்வளவு நாளும் எனக்குள்ளெ ஒரு வெறுப்பு ஏறியிருந்துச்சு ஐரீன்.

எனக்கு வெறுப்பெல்லாம் இல்லே மணி ஸார். இவ்வளவு பொருந்தாமெ மேக்கப் செஞ்சிக்கிட்டு ஒரு லேடி வருதூன்னா அதுக்கு ஏதாவது காரணம் உண்டும்னுதான் நான் நெனைக்கும். இதே எங்கம்மாவெப் பாருங்கோ. மேக்கப்பே போடமாட்டாது…

அது வாஸ்தவம்தான். ஐரீனைப் பார்க்கச் சிலசமயம் வங்கிக்கு வருவார் அவளுடைய தாய். குளித்துத் தலைசீவியவுடன் நேரே தெருவில் இறங்கிவிட்ட மாதிரிப் பளிச்சென்று இருப்பார். விழியோரங்களிலும், நெற்றியிலும் நாலைந்து வரிகளாக ஓடும் சுருக்கங்களும், தலைமுடிக்குப் பூசிய அடர் கறுப்புச் சாயமும் தவிர வேறு ஒப்பனை எதுவும் கிடையாது. ஆனால், ஒருநாளும் புடைவை கட்டி வரமாட்டார். இள நிறங்களில், முழங்காலுக்குச் சற்றுக் கீழோடு நின்றுவிடும் கவுன்தான் எப்போதும்.

…ஆங்கிலோ இண்டியன் கம்யூனிட்டியிலே இப்பிடி ஒரு ஆர்த்தடாக்ஸ் பொம்பளையைப் பாக்கவே முடியாது மணி ஸார். ஐயர் வீட்டுப் பொண்ணு மாதிரிப் பொத்திப் பொத்தியில்லே என்னெ வளக்குது.

சொல்லும்போது ஐரீனின் கண்கள் மினுங்கின. அதே கண்களில் நீர் மல்க, அதே தாயாரைப் பற்றி வேறு வாக்கியங்களில் பேசப்போகிறாள் ஐரீன் என்பது எங்கள் இருவருக்கும் அப்போது தெரியாது. ஆறே மாதத்தில் அந்த நாள் வந்துவிட்டது. அதைச் சொல்ல மனம் கனக்கிறது. கொஞ்ச நேரம் கழித்துச் சொல்கிறேனே. கெட்ட விஷயங்களைச் சற்று ஒத்திப்போட்டால் ஒன்றும் கெட்டுவிடாது, இல்லையா?…

அந்தப் பையன் சம்பந்தமா அந்தம்மாவுக்கு ஒரு இன்ஹிபிஷனும் இல்லே பாத்தியா ஐரீன்?

அதுதான் ஸார் மதர்ன்றதூ.

இதே வாக்கியத்தை இதே உணவறையில் வைத்து முந்தினமாதம் ஐரீனிடம் நான் சொல்லியிருந்தேன். சொன்னேன் என்பதைக் காட்டிலும் ஜம்னாவை மேற்கோள் காட்டினேன் என்பதுதான் சரி. அன்று நாங்கள் பேசிக்கொண்டிருந்ததும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது…

வத்தலக்குண்டுவில் நாங்கள் ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருந்த நாட்கள். வீட்டு உரிமையாளர் கோவிந்த ராவ்… அவருடைய மகள் ஜம்னாவால் ஏற்பட்ட சிக்கலைத்தான் ஐரீனிடம் கதையாகவும் ஆறுதலாகவும் சொன்னேன்.

அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஐரீன் வீட்டுக்கு நேர் கீழே உள்ள குடும்பத்தில் ரிச்சர்டு என்று ஒரு பையன் இருந்தான். கித்தார் வாசிப்பதில் கெட்டிக்காரன். போனி எம் மின் பாடல்களில் ஐரீன் மாதிரியே அவனுக்கும் அபாரமான ஈடுபாடு.

மொட்டைமாடிக்குத தற்செயலாக ஐரீன் போயிருக்கிறாள். ரிச்சர்டு கித்தாரை வைத்து நோண்டிக்கொண்டிருந்தானாம். இவளைப் பார்த்தவுடன் உற்சாகமாக ‘ஹாய்’ என்றிருக்கிறான். இருவருமாக ‘பை த ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’ பாடத் தொடங்கி நாலைந்து வரிகள் போயிருப்பார்கள். ஐரீனின் அம்மா வந்துவிட்டாள்.

பருந்திடமிருந்து குஞ்சைக் காப்பாற்றப் பாயும் தாய்க்கோழி மாதிரிப் பதட்டமாய் இருந்தாளாம். ஐரீனைப் பிடி விலகாமல் தரதரவென்று தங்கள் போர்ஷனுக்குள் இழுத்துப் போய்விட்டாள். உள்ளே நுழைந்தவுடன் பளாரென்று ஓர் அறை.

தென்னக ரயில்வேயில் என்ஜின் டிரைவராக இருந்து அகாலமாய் மரித்த அமரர் பெர்நார்டின் மறைவுக்குப் பிறகு – அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் – இவளை வளர்க்கத் தான் பட்ட பாட்டையும், கணவரின் இடத்தில் தனக்குக் கிடைத்த ரயில்வே உத்தியோகத்தில் எத்தனையோ ஆண்கள் தன்னைச் சுற்றிச்சுற்றி வந்தபோதும் மனசையும் உடம்பையும் கல்லாக்கிக்கொண்டு இவள் ஒருத்திக்காகவே வருஷக்கணக்காகத் தனியாக இருந்து வருவதையும் ஆயிரத்திச் சொச்சமாவது தடவையாகக் கண்ணீர் மல்க ஒப்பித்தாள்.

திட்டட்டும் மணி ஸார். நான் ஏதாவது மிஸ்டேக் பண்ணினா திட்டட்டும். யாராவது ஆம்பளைகூடப் பேசினாலே ‘ஊர் மேயுறே’ன்னு ஆரமிச்சா எப்பிடி ஸார். அதுலேயும் தமிள்லே திட்டுதூ. ஏதோ குப்பத்திலே கேக்குற மாதிரி அவளோ பச்சைபச்சையா இருக்கூ…

என்று கண்கலங்கினாள் ஐரீன். அவளுக்கு இதமாக இருக்கட்டும் என்றுதான் ஜம்னாவைப் பற்றிச் சொன்னேன். உண்மையில், நான் சொன்னது ஜம்னாவைப் பற்றி அல்ல. என்னுடைய அம்மாவைப் பற்றி.

ஒரே பையனான என்னையும் தன் மனைவியையும் விட்டுவிட்டு என் தகப்பனார் ஓடிப்போய்விட்டார். கம்பத்தில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் நர்ஸ் ஒருத்தியுடன் குடித்தனம் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டு, என் தாய்மாமன்கள் மூன்றுபேரும் கொதித்துக் கிளம்பினார்களாம். அம்மா வேண்டாமென்று தடுத்துவிட்டாள்.

ஒடஞ்ச கலயம். இன்னிமே ஒட்டாதுண்ணா

என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். மாமன்மார் மாதாந்திரம் கொடுத்த சொற்பத் தொகையும், அக்ரஹாரத்தில் நாலைந்து வீடுகளில் பாத்திரம் தேய்தது வந்த வருமானமும் கொண்டு என்னைப் படிக்க வைத்தாள் அம்மா.

தேசிய மய வங்கியில் வேலை கிடைத்து, நான் திண்டுக்கல் கிளையில் சேர்ந்தேன். அந்த வாரக் கடைசியில் ஊருக்கு வந்தபோது, விசாலாட்சியம்மனுக்குப் பட்டுப் புடைவை சாத்தினாள்.

கண் திறந்துட்டேடீம்மா. என் வயித்துலெ பாலெ வார்த்துட்டே.

என்று சந்நிதியில் குப்புற விழுந்து என் அம்மா கதறியதைப் பார்த்து கோட்டீஸ்வரக் குருக்கள் மிரண்டு போனார். அவரும் சின்ன வயதுதானே பாவம். என்னைவிடப் பத்து வயது அதிகமிருந்தால் ஜாஸ்தி. அர்ச்சனை முடித்துக் கிளம்பும்போது, என்னைத் தனியாக அழைத்து,

அம்பி, தாயாரெ ஒரு நல்ல டாக்ட்டர்ட்டேக் காமியேன். சித்தம் கலங்கினவ மாதிரின்னா நடந்துக்கறா.

என்று ஆலோசனை சொல்லி என் முறைப்பைப் பதிலாக வாங்கிக்கொண்டார்.

அவ்வளவு பிரியம் இருந்ததினாலேதான் அவ்வளவு ஆத்திரமும் வந்திருக்கு அவளுக்குன்னு புரியும்போது எனக்கு முப்பத்தைஞ்சு வயசாயிருச்சு ஐரீன். அம்மா காலமாயிப் பத்து வருஷம் ஆயிருந்தது…

என்று பெருமூச்சு விட்டேன். மாணிக்கவாசகம் ஏப்பம் விடும் ஒலி கேட்டது.

…சரி. நாளைக்கிக் கண்ட்டின்யூ பண்ணுவம்.

என்று எழுந்தேன்.

மறுநாள் ஞாபகமாகக் கேட்டாள் ஐரீன். நானும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான கோவிந்த ராவ் பேருந்து நிலையத்துக்கு எதிரே ஓட்டல் வைத்திருந்தார். அவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும். மகனை எஸ்ஸெஸ்ஸெல்ஸி முடித்தவுடன் கல்லாவில் உட்கார வைத்துவிட்டார். பள்ளிக்கூடத்திலேயே முதலாவதாக வந்துகொண்டிருந்த பையனை மேற்கொண்டு படிக்கவிடாமல் கெடுத்துவிட்டார் ராயர் என்று தாயார் ருக்மிணிபாய் என் அம்மாவிடம் நாள்தவறாமல் சொல்லிப் புலம்புவாள். தினசரி இரவில் அவர்கள் குடும்பத்தில் பெரிய யுத்தம் நடக்கும் பெற்றவர்களுக்குள். ஒரு வார்த்தை விடாமல் எங்கள் போர்ஷனுக்குக் கேட்கும். ஆனால், கன்னடத்தில் நடக்கும் சண்டை என்பதால், எங்களுக்கு ஒரு வார்த்தையும் புரியாது.

மூன்றாவது மகள் ஜம்னா அருப்புக்கோட்டையில் வாழ்க்கைப்பட்டிருந்தாள். கணவர் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறவர். மூத்த பெண்கள் இருவரையும் கர்நாடகத்தில் ஓட்டல்களில் வேலை பார்க்கிறவர்களுக்குக் கொடுத்திருந்தது. கஷ்ட ஜீவனம்தான். ஆனால், அவர்களால் இவர்களுக்குப் பிரச்சினையில்லை. ஜம்னாவின் புருஷனோ ஓட்டலில் பங்கு கேட்கிறார்.

ஓட்டலை நம்பி குப்புராவின் படிப்பையும் கெடுத்தாகிவிட்டது. ருக்மிணிபாய் பங்கு கொடுக்கக் கூடாது என்கிறாள். ‘கொள்ளிபோட என்று இருப்பது ஒரே பிள்ளை. அவன் தலையில் ஓட்டலைக் கட்டி வாழ்க்கையைக் கெடுத்தது போதும். மகளை வாழ வைக்க என்று இன்னொரு தடவை கெடுக்க வேண்டியதில்லை.’

பங்கு கொடுத்தால் தப்பில்லை என்பது ராயர் தரப்பு. ‘தொழில் தெரிந்தவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான். பெரியகுளம் பஸ்ஸ்டாண்டில் இன்னொரு ஓட்டல் விலைக்கு வருகிறதாகச் சொல்கிறார்கள். மூன்றாம் பேர் அறியாமல் அதைக் குப்புவின் பேருக்கு வாங்கி விடலாம்.’

‘பங்கு கொடுத்தால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று பயமுறுத்துகிறாள் ஜம்னா. கொடுப்பது என்று ஆரம்பித்துவிட்டால் இத்தோடு நிற்காதாம்.

இதுதான் தினசரிச் சண்டைக்குக் காரணம் என்று ஜம்னா விளக்கினாள்… ஆனால், சண்டை கன்னடத்தில் நடக்கவில்லையாம். கோவிந்த ராவ் குடும்பத்தின் தாய்மொழி துளு.

நான் பார்த்த பெண்களிலேயே பேரழகி என்றால் அது ஜம்னாதான். சுண்டினால் ரத்தம் தெறிக்கும் நிறம். பிற்பாடு ஏதோவொரு சினிமாப் பாட்டில் ‘வெண்சங்குக் கழுத்து’ என்று உவமானம் வந்தபோது எனக்கு உடனடியாக ஜம்னாவின் ஞாபகம் வந்தது. ஆனால், ஜம்னாவின் அழகைப் பூரணமாக மறைத்த கருந்திரை அவளுடைய கண்கள்.

லேசாகப் பழுப்பு நிறம் மினுங்கும் பூனைக் கண்களில் நிரந்தரமாக இருந்து வந்த துக்கத்தின் தன்மை அப்படி. மின்வாரிய ஊழியர் பெண்டாட்டியை மட்டும்தான் பிறந்தவீட்டுக்கு அனுப்பியிருந்தார். இரண்டு வயதான இவர்கள் குழந்தையைத் தம்மிடமே வைத்துக்கொண்டு விட்டார். அதிகபட்ச அழுத்தம் கொடுக்காமல் சொத்தில் பங்கு வாங்க முடியுமா? தன் குழந்தையின் பிம்பத்தை வெட்டவெளி முழுவதும் தேடியவாறே நடமாடுகிறாள் ஜம்னா என்று தோன்றும் எனக்கு. ஆக, எனக்குப் பரிச்சயமான பெண்களில் தொட வேண்டும் என்ற விருப்பத்தைக் கடைசிவரை கிளர்த்தாத ஒரே பெண்ணும் அவள்தான்…

மணி ஸார், அப்ப நானு?

என்று கேட்டாள் ஐரீன். கண்களில் குறும்பு ததும்பியது.

அட நீ ஒண்ணு. நீ என் பொண்ணு மாதிரியில்லே இருக்கே. தவிர, அப்ப இருந்த வயசுக்கு இப்ப டபிளாயிருச்சே ஐரீன் எனக்கு?

என்றேன். இருவரும் சிரித்தோம்.

…ஆனால், என் அம்மாவுக்கு இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை. திண்டுக்கல்லிலிருந்து வார விடுமுறைக்கு நான் ஊர் வரும்போது, ஜம்னா சம்பந்தமாக நிச்சயம் ஒரு சண்டையாவது எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும். இத்தனைக்கும் ருக்மிணிபாயும் அம்மாவும் நெருங்கிய சிநேகிதிகள். ஒருவேளை, தன் பிள்ளை அவ்வளவு யோக்கியன் இல்லை என்று அம்மா நினைத்திருக்கலாம். நான் யோக்கியன் இல்லைதான். ஆனால், அம்மாவுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எந்த நேரமும் கொட்டித் தீர்த்துவிட ஆயத்தமாய் இருக்கும் கண்களைப் பார்த்ததுக்குப் பிறகும் ஒருத்தனுக்குக் காமம் எழும்புமா?

ஒரு சனிக்கிழமை. மொட்டை மாடியில் ஜம்னா என்னிடம் வழக்கம்போலத் தன் குழந்தை பற்றிய நினைவுகளைச் சொல்லிக் கலங்கிக்கொண்டிருந்தாள். அப்போது இவளுக்குப் பச்சை உடம்பாம். திடீரென்று மஞ்சள் காமாலை தாக்கிவிட்டது. குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். குழந்தையானால், வஞ்சகமில்லாமல் தாயிடம் குடிக்கக் கூடியவன். இவளுக்கும் தாராளமாகச் சுரக்குமாம். வீர் வீரென்று அவன் அழும்போது இவளுக்கு மார் கட்டிக்கொண்டு, மேலும் சிக்கலாகிவிட்டதாம்.

இதைச் சொல்லும்போது கரகரவெனக் கண்ணீர் வழிய, தன் நெஞ்சில் வலதுகையை வைத்து அழுத்திக்கொண்டாள் ஜம்னா. உதடுகள் கோணிவிடாமல் தடுக்கப் பெரும் பிரயாசைப் படுகிறாள். பாவம், அவளும் இதையெல்லாம் யாரிடம் சொல்லித் தீர்த்துக்கொள்வாள்?..

அந்தச் சமயத்தில் அம்மா மாடியேறி வந்தாள். ஜம்னாவின் புறம் திரும்பவேயில்லை. நேராக என்னைக் கண்ணுக்குக் கண் பார்த்தாள்.

மணி, கீழே வா. உங் கிட்டெக் கொஞ்சம் பேசணும்.

நாய்க்குட்டி மாதிரிப் பின்தொடர்ந்தேன். மறுத்து ஒரு சொல் பேசினாலும், ஜம்னாமீது பாய்ந்துவிடுவாளோ என்று அச்சம்.

அன்று நடந்த தகராறின் முடிவில் அம்மாவுக்கு நான் சில விளக்கங்களை எடுத்துரைக்க வேண்டி வந்தது.

1. காதல் திருமணம் செய்துகொள்ளும் உத்தேசம் எதுவும் எனக்குக் கிடையாது.
2. தவறிப் போய்க் காதலித்தாலும் மாத்வப் பெண்ணைக் காதலிக்க மாட்டேன்.
3. மாத்வப் பெண்ணாகவே இருந்தாலும் மணமான பெண்ணைக் காதலிக்க மாட்டேன்.
4. மணமான பெண்ணாகவே இருந்தாலும் நிச்சயம் ஜம்னாவைக் காதலிக்க மாட்டேன்.
5. ஒருவேளை ஜம்னாவைத்தான் காதலிப்பது என்று முடிவெடுத்துவிட்டேன் என்றால், எந்தக் கொம்பன், கொம்பியாலும் என்னைத் தடுக்க முடியாது.
6. அப்படி ஒரு வீம்பு எனக்குள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது அம்மாவின் பொறுப்புத்தான்.

கடைசி ஷரத்துக்கு விசுவாசமாகக் கடைசிவரை இருந்தாள் அம்மா என்று சொல்லிவிட முடியாது. அதற்குப் பிறகும் ஓரிரு தடவைகள் இதே பிரச்சினையை எழுப்பியிருக்கிறாள். என்ன, முந்தைய நான்கு விதிகளுக்கு நியாயமாய் நான் நடந்துகொண்டேன், பெரியவர்கள் பார்த்துவைத்த தாடகையைத்தான் திருமணம் செய்துகொண்டேன் என்பதை என் அம்மா உயிருடன் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை. தாய்மாமன்கள்தான் என் திருமணத்தை நடத்திவைத்தார்கள்…

அப்பவே நீங்க பாய்ண்ட் பாய்ண்டாத்தான் பேசுமா மணி ஸார்?

பின்னே? அதெல்லாம் பிறவியிலேயே வர்ற வியாதி ஐரீன்.

மறுபடியும் இருவரும் சிரித்தோம். ரொட்டித் துண்டை விழுங்கிவிட்டு ஐரீன் கேட்டாள்:

ஒங்க அம்மா இப்பிடி சந்தேகப் படுதூண்றது அவுங்களுக்கு, அதான் அந்த ஜம்னா மேடத்துக்குத் தெரியுமா மணி ஸார்?

நான்தான் சொன்னேன். ஜம்னா எவ்வளவு தங்கமானவ ன்னு எனக்குத் தெரியவந்தது அப்பொத்தான். சட்டுன்னு பதில் சொன்னா. ‘அவுங்க நினைக்கிறதுலெயும் ஞாயம் இருக்குதானே மணி…’
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

தாய்மை யாதெனில்… Empty Re: தாய்மை யாதெனில்…

Post by இறையன் Sun Dec 18, 2011 4:04 pm

பெருமூச்சு விட்டேன்.

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தோம். நான் அழுக்குக் கோப்பையிடம் சென்று திரும்பினேன். கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். இன்னும் நேரம் இருக்கிறது. விட்ட இடத்திலிருந்து ஐரீன் தொடர்ந்தாள்.

நீங்க இதெப்போயி அந்த மேடத்துக்கிட்டே சொல்லியிருக்க வேண்டாம் மணி ஸார். உள்ளுக்குள்ளெ எவ்வளவு சங்கடப்பட்டுருக்கும் அதூ?

வேணும்னு சொல்லலெ ஐரீன். சொல்ற மாதிரி சந்தர்ப்பமாயிருச்சு.

…ஜம்னாவின் இன்னொரு பரிமாணம் தெரிவதற்குக் காரணமான அந்தச் சம்பவம் மறுவாரமே நிகழ்ந்துவிட்டது. வாரக் கடைசியில் ஊர் திரும்புகிறேன். பயணம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே வயிறு கலக்க ஆரம்பித்துவிட்டது. முந்தின இரவு இரண்டாம் ஆட்டம் முடிந்து திரும்பும்போது அகாலத்தில் சாப்பிட்ட டபிள் ஆம்லெட்டும் சிலோன் புரோட்டாவும் ஒத்துக்கொள்ளவில்லையோ என்று சந்தேகம்.

வயிற்றுக்குள் பெரும் பிரளயம் நடக்கிறது. வத்தலக்குண்டுக்கு ரயில் வசதி இல்லை என்பதை ஏன் யாருமே கவனிக்க மாட்டேனென்கிறார்கள் என்று மிகமிக வேதனையாக உணாந்தவாறு தொடர்ந்து பயணம் செய்கிறேன். ஊர் வந்து விட்டது. பேருந்திலிருந்து படியிறங்கி நடக்க முடியவில்லை. வியர்க்க ஆரம்பித்துவிட்டது. முன்னங்கைகளில் முட்கள் பூத்த மாதிரி ரோமக்கால்கள் வியர்க்குரு தடிமனுக்குப் புடைத்துவிட்டன. மேற்கொண்டு எட்டு வைக்க முடியாதபடி கால்கள் பின்னுகின்றன. ஜட்கா அமாத்திக்கொண்டு போகலாமென்றால் வண்டித் தடதடப்புக்கு வயிறு வெடித்துவிடும் என்று பயமாய் இருக்கிறது.

எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை. நிலைவாசல் தாண்டி உள்ளே நுழைந்தவன், பேண்ட்டின் பித்தானைக் கழற்றுகிறேன். அதற்குமேல் பொறுமை காக்க முடியாத மலக்குடல் உள்ளாடை மீறிக் கழியத் தொடங்கியது. மூச்சுத் திணறவைக்கும் துர்நாற்றம். கிட்டத்தட்ட ஒரு மணிநேர வலி இதமாக வடிந்து இறங்குவதை ஆனந்தமாய் உணர்ந்தபடி சுவரில் சாய்ந்து நின்றேன். உடம்பு இரண்டு மூன்று தடவை சிலிர்த்து அடங்கியது.

அம்மா வந்து என் தோளைப் பிடித்துக்கொண்டாள். நான் சமனப்பட்டுவிட்டேன் என்று தெரிந்ததும் குளியலறைக்குப் போய் பிளாஸ்டிக் வாளி நிறையத் தண்ணீரும் குவளையும் கொண்டு வந்தாள். தோளில் சலவைத் துண்டு கிடந்தது.

நா வேணா அலம்பிவிடட்டுமாடா?

வேணாம் .வேணாம்.

என்று கூசினேன். துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பேண்ட்டையும் உள்ளாடையையும் கழற்றி அம்மாவிடம் கொடுத்தேன். அவள் சுருட்டி எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் போனாள். நான் கழிவறைக்குப் போனேன். சுத்தம் செய்துகொண்டு திரும்பும்போது உறைத்தது – எத்தனையோ வருடம் கழித்து அம்மா என்னை’டா’ போட்டுப் பேசினாள் அன்று.

மொட்டை மாடியில் நானும் ஜம்னாவும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து விசாலாட்சியம்மன் கோவில் வாசல் நன்கு தெரியும். அம்மா கோவிலுக்குள் நுழைகிறாள். வெளியூரிலிருந்து வந்து முகாமிட்டிருக்கும் கிழவர் ஒருவர் பாகவதம் பிரவசனம் செய்கிறார். தினசரி சாயங்காலம் அம்மா போய்க் கேட்டுவிட்டு வருகிறாள். உடன் இருக்கும் சிஷ்யன் பார்வையில்லாதவனாம். கதையைக் கிழவர் சொல்ல, இடையில் கீர்த்தனங்களை அவன்தான் பாடுகிறானாம். ஹார்மோனியத்தை வாசித்துக்கொண்டு அவன் பாடும்போது, எது குரல் எது வாத்தியம் என்றே பிரித்துப் பார்க்க முடியாது என்று புல்லரித்தாள் அம்மா… ஜம்னா என்னிடம் கேட்டாள்:

சாயங்காலம் ரொம்ப வேகமா வந்தியே மணீ. என்ன ப்ராப்ளம்?

முழுக்கதையையும் சொன்னேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு,

இருபத்து மூணு வயசுப் பிள்ளைக்கிப் பீயள்ளி அலம்பிவிடறேங்கறால்லியா? அதான் அம்மா. உங்கம்மா மாதிரிப் பிரியமான தாயாரா என்னாலெல்லாம் இருக்க முடியுமான்னு தெரியலே மணி.

நீ அவளெப் பத்தி இப்பிடிச் சொல்றே. அவ உன்னை என்னன்னு நெனைக்கறா தெரியுமா?

ஜம்னாவின் பதில் கொடுத்த ஆச்சரியம் இன்றுவரை அடங்கவில்லை எனக்கு. என்னுடைய அம்மா தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்றுகூடக் கேட்டுக்கொள்ளாமலே அந்த பதிலைச் சொன்னாள்:

அவுங்க நினைக்கிறதுலெயும் ஞாயம் இருக்குதானே மணி… அவுங்க இடத்துலெ நான் இருந்தா, நானும் சந்தேகப்படத்தான் செஞ்சிருப்பேன்… போறது. நீ கீழெ இறங்கிப் போ மணி. இனிமே நாம தனியா உக்காந்து பேச வேணாம். தாயார் மனசெப் புண்படுத்தறது உனக்கும் நல்லதில்லே, எனக்கும் நல்லதில்லே.

கழுத்தில் கைவைக்காத குறையாக என்னை மாடியைவிட்டு இறக்கி அனுப்பிவிட்டாள். அதன் பிறகு அவள் என்னிடம் தனியாகப் பேசுவது என்ன, பொது இடத்தில் பேசுவதுமே வெகுவாகக் குறைந்து வந்து அறுதியாக நின்றே விட்டது…

அப்பறம் அந்த ஜம்னா என்ன ஸார் ஆனாங்க?

அதையேங் கேக்கிறே. அவுங்க ஓட்டல் வாசல்லே பீடாக் கடெ போட வந்த ராஜஸ்தான்காரனோடெ நெருக்கமாயி ஓடிப் போயிட்டாளாம். பிற்பாடு கேள்விப்பட்டேன். எங்க அம்மா இறந்துபோனதாலே நான்தான் திண்டுக்கல்லெயே ரூம் பார்த்துத் தங்கீட்டெனே.

அந்த மேடத்தோடெ கொளந்தே?

அது இன்னமும் கொளந்தையாவா இருக்கும்? இப்பொ ஒன் வயசைத் தாண்டியிருப்பான்.

ஓ.

என்றவாறு எழுந்தாள் ஐரீன். நானும் எழுந்தேன். உள்ளே வந்த மாணிக்கவாசகம் டிபன் கேரியரை லொட்டென்று வைத்தார்.

கவுண்ட்டரில் சென்று உட்கார்ந்தேன். ஐரீன் தொடர்பாக எனக்குள் நிலவிவந்த பிரகாசத்தில் லேசாக இருள் கலந்துவிட்ட மாதிரி உணர்ந்தேன். பின்னே? ஜம்னா என்ன ஆனாள் என்று அவ்வளவு ஞாபகமாகக் கேட்டுக்கொண்டவள், என் அம்மா ஏன் இறந்தாள் என்று கேட்கவே யில்லையே? ஒருவேளை, நான் சொன்ன கதையின் போக்கில் ஜம்னாவையும் தன்னையும்தான் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்ததோ என்னவோ அவளுக்கு.

ஐரீனுக்கு எப்படியென்றாலும் சரி. எனக்கு அம்மாவின் மரணத்தை நினைத்தால் அடிவயிற்றிலிருந்து பீதியும், குமுறலும் கிளம்பி வரும். பஸ் பிரயாணத்தில் தொந்தரவு பண்ண ஆரம்பித்த வயிறு நிரந்தரமாகப் படுத்த ஆரம்பித்ததும், தொடர் விடுமுறையில் இருந்துகொண்டு, ஆஸ்பத்திரிக்கும் கழிவறைக்கும் மாறி மாறி நான் ஓடித் திரிந்ததும், ஆசனவாயில் மிளகாயை அரைத்துத் தடவிய மாதிரி எந்நேரமும் காந்தல் இருந்ததும் எல்லாம் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில். அக்டோபர் ஆரம்பத்தில் அம்மா இறந்துவிட்டாள்.

ஒரே வாரம்தான். இன்ன வியாதியென்று டாக்ட்ர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இறந்துபோனாள். எனக்கு செரிமானம் தொடர்பாக வந்திருந்தது தீரா வியாதி என்று அறிவித்த குடும்ப டாக்டர் சத்தியசீலன் எம் டி, மறுமுறை எடுத்த சோதனைகளில் தடயமே இல்லாமல் வியாதி காணாமல் போய்விட்டதே என்று வியந்து சொன்னதை நானுமே ஆழ்ந்து அனுபவிக்க முடியாதபடி நிகழ்ந்து முடிந்திருந்தது அம்மாவின் மரணம்.

நள்ளிரவு தாண்டியும் தூங்கவிடாமல் ஐரீனைப் பற்றிய ஞாபகங்கள் இப்படி வரிசையாய் வந்து கொட்டுவதற்குக் காரணம் இருக்கிறது. இன்று சாயங்காலம் பல் மருத்துவரிடம் சென்றிருந்தேன். காத்திருக்கும் நேரத்தில் நோயாளிகள் படிப்பதற்காக ஆங்கிலத்திலும் தமிழிலுமாகச் சில பத்திரிகைகள் கிடந்தன. ஆங்கில மாதாந்தரி ஒன்றை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

ஏழாவது பக்கத்தில் பளபளவென்று ஐரீனின் புகைப்படம். அதுதான் முன்னமே சொன்னேனே, ஐரீன் என்று சொன்னால் இன்னார் என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவளுடைய தற்போதைய பெயரில் குறிப்பிட எனக்கு விருப்பமில்லை. இந்தப் பெயர் சூட்டிக்கொண்ட ஆரம்ப நாட்களின் வேதனை அவளுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம். எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

ஒருவார விடுப்பு முடிந்து அவள் பணிக்குத் திரும்பிய அந்த நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது. வழக்கமான மலர்ச்சி இல்லாது, கலங்கிய முகத்துடன் வந்து உட்கார்ந்தாள் ஐரீன். கடனேயென்று சொன்ன குட்மாணிங்கோடு சரி. பிரியமான அந்தப் புன்சிரிப்பைக் காணோம். அடிக்கடி கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

பனிரெண்டு மணி சுமாருக்கு ஐரீனின் அம்மா வங்கிக்கு வந்தார். புத்தம் புதிய ஐநூறு ரூபாய்க் கட்டுகள் இரண்டைத் தம் கணக்கில் கட்டினார். நான் விசாரிக்காமலே, நயமான ஆங்கிலத்தில், கிசுகிசுப்பாக, பக்கத்துக் கூண்டுக்குக் கேட்காதவாறு, முகமெல்லாம் சிரிப்புடன், சொன்னார்:

மிஸ்ட்டர் மணி. இது என்ன தெரியுமா? ஐரீன் வாங்கியிருக்கும் முதல் அட்வான்ஸ். அவள் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாள். நீங்கள் அவளுடைய நெருங்கிய நண்பர், நலம் விரும்பி என்பதால் உங்களிடம் தெரிவிக்க விரும்பினேன்.

மத்தியானம் உணவறையில் ஐரீனிடம் நான் விசாரித்துத் தொலைத்திருக்க வேண்டாம். பொங்கிக் குமுறிவிட்டாள்.

அது முன்பணம் இல்லை மணி ஸார். கூலி.

என்று விசித்தாள். பொதுவாக என்னிடம் ஆங்கிலத்தில் பேசாத ஐரீன் அன்று பேசிய நாலைந்து வாக்கியங்களில் செல்லமான கொச்சைத் தமிழ் எட்டியே பார்க்கவில்லை என்பதோ, என் கண்ணைப் பார்த்து அவள் ஒரு சொல்லும் பேசவில்லை என்பதோ அல்ல, அடுத்த நாளிலிருந்து என்னுடன் சேர்ந்து சாப்பிட வருவதை நிறுத்திவிட்டாள் என்பதுதான் எனக்குப் பெரிய துக்கம்.

மறு மாதம் வேலையை ராஜினாமா செய்தாள். ‘முதல் படத்திலேயே டூ பீஸ் நீச்சலுடையில் நடித்த புரட்சிக்காரி’ என்று பத்திரிகைகள் புகழ்ந்தன. பக்கத்து இருக்கையில் இருந்தபோது ஓரக்கண்ணுக்குத் தட்டுப்பட்டதைவிடப் பல மடங்கு பெரிய முலைகளுடன் தமிழ் வாராந்தரிகளின் அட்டைப்படத்தை அலங்கரிக்கத் தொடங்கினாள். எவ்வளவுதான் இருந்தாலும், அந்தக் கண்களில் இருந்த கள்ளமின்மையை யாராலும் எதுவும் செய்ய முடியாமல்தான் இருந்தது.

துரதிர்ஷ்டம், அந்தப் படம் தோற்றுப்போனது. தொடர்ந்து இரண்டு மூன்று தோல்விப் படங்களில் நடித்துவிட்டுக் காணாமல் போனாள் ஐரீன். புகழ் பெற்ற பத்திரிகைக் குடும்பத் தலைமகனின் பராமரிப்பில் சவுகரியமாக இருக்கிறாள் என்று ஏதோ பத்திரிகையில் கிசுகிசு வந்ததாக என் மனைவி படித்துச் சொன்னாள்.

இப்போது மருத்துவமனைப் பத்திரிகையில் பார்க்கும்வரை அவளுடைய ஞாபகம் இல்லாமலேதான் இருந்திருக்கிறது. இடையில், கார்கில் யுத்தம் முடிந்த சூட்டோடு வெளிவந்த ஹிந்திப் படம் ஒன்றை, என் மகன் எங்கிருந்தோ வாங்கிவந்த திருட்டு விசிடியில் பார்த்தேன். அகில இந்திய அளவில் பயங்கரமான வெற்றியைச் சம்பாதித்த படம் அது. அம்மா வேடத்தில் நடித்திருப்பது ஐரீன் என்பதே இடைவேளைக்குப் பிறகுதான் புரிந்தது எனக்கு.

புழுதியும், உச்சஸ்தாயியில் ஷெனாயும் வயலினும் சாரங்கியும் மாறி மாறி அலறும் நாராச ஒலியோடு, கண்ணீரும் ரத்தமும் சிதறி நிரம்பிய கடைசிக்காட்சியில், தேசத் துரோகியான மகனை பாக்கிஸ்தான் எல்லையில் வைத்து தன் சொந்தக் கைகளால் சுட்டுக்கொன்றுவிட்டுக் கதறிக் கதறி நாலுபக்கம் வசனம் பேசிவிட்டு தன்னையும் சுட்டுக்கொள்ளும் தாயார். அந்த வேடத்துக்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகை விருதை அந்த வருடம் கொடுக்காமல் விட்டது தவறு என்று கண்டனம் தெரிவித்தது முன்குறிப்பு. இந்தியாவின் பேரழகான தாய் என்பதுதான் அந்தப் பேட்டியின் தலைப்பே.

ஆனால், இன்று பார்த்த பத்திரிகைப் புகைப்படத்தில் இருந்தது ஐரீனே அல்ல. இந்தக் கண்களே வேறு. முற்றிவிட்டவை. இந்தியில் ஏழெட்டுப் படங்களில் நடிக்கிறாளாம். ‘எப்படியோ நன்றாக இருந்தால் சரி,’ என்று என் வயதுக்குப் பொருத்தமான ஆசி வாக்கியம் எனக்குள் எழுந்தது. என்ன, அந்தப் பேட்டியில் அவள் சொல்லியிருந்த இரண்டு மூன்று தகவல்கள்தாம் உறுத்தின.

1. பள்ளிக்கூடம் முடித்தவுடனே நேரே நடிக்க வந்துவிட்டாள் ஐரீன். அவளுடைய ஆதரிசங்கள் ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ. இந்தியில் நர்கீஸ். தமிழில்? சந்தேகமென்ன, ஐரீனேதான். இதைச் சொல்லிவிட்டு அழகாகச் சிரித்தார் என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பு வேறு.
2 பூர்வாசிரமத்தில் தான் ஒரு ஹிந்துப் பெண். ராஜலட்சுமி என்று பெயர். சொந்த ஊர் ராஜமுந்திரிக்கு அருகில் உள்ள சிறு கிராமம்.
3 தன்னைத் திறமையான நடிகையாய் வளர்ப்பதில் தன் தாய்க்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு. இன்னொரு பிறவி எடுத்தாலும் திருமதி. மங்கம்மாவின் மகளாகவே பிறக்க ஆசைப்படுகிறாள் ஐரீன்.
4 தகப்பனார் ரோசைய்யா நிலச் சுவான்தார். தற்சமயம் அமரராகிவிட்டார்.

இந்தத் தகவல்கள் எதுவுமே உண்மையானவை அல்ல – அதனாலென்ன, அவளுடைய தற்போதைய கண்களுடன் ஒத்துப் போகிறவை… எப்படியோ, ஐரீன் புண்ணியத்தில் இன்று அம்மாவின் ஞாபகம் மிக மிக அதிகமாகச் சூழ்ந்திருக்கிறது என்னை.

பணியிலிருந்து ஓய்வு பெற்று மறுபடியும் வத்தலக்குண்டுவிலேயே வந்து ஸெட்டிலாக முடிவெடுத்தேன். வாழ்வின் இறுதிக் காலத்தை பால்யத்தின் இனிமையான ஞாபகங்களுடன் கழிக்கவேணடும் என்பதுதான் பிரதானமான விருப்பம். மிகக் கச்சிதமாக வட்டம் பூர்த்தியாகிவிடும் அல்லவா?

தவிர, என் குழந்தைகள் வளரவளர, அம்மாவின் ஆகிருதியும் எனக்குள் வளர்ந்து வந்திருந்தது. அவள் இருந்த காலத்திலெல்லாம் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் விடாமல் சண்டை போட்டுவிட்டு நான் போய்ச் சேரும் காலம் வந்த பிறகு அம்மாவிடம் இவ்வளவு பாசமும் அவளிடம் நான் நடந்துகொண்ட விதம் பற்றிய ஆதங்கமும் பொங்கியது சற்று விநோதமான சமாசாரம்தான். ஆனால், உள்ளுணர்வின் ஆழத்தில் அதற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்திருக்கிறது என்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது.

‘சொந்த ஊரில் சென்று ஸெட்டில் ஆகட்டுமா’ என்று கேட்டபோது என் குழந்தைகள் உடனடியாக ‘சரி’ என்று சொல்லிவிட்டார்கள். பக்திப் பழமான என் மனைவி மட்டும், ‘பக்கத்துத் தெருவில் ஒரு சுவாமிஜி வந்திருக்கிறார். அவரிடம் சென்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொன்னாள்.

என்னையும் வற்புறுத்திக் கூட்டிப் போனாள். சுவாமிஜி பார்வையில்லாதவர். விழிகள் இருக்க வேண்டிய இடத்தில் வெற்றுக் குழிகள் இரண்டு மட்டுமே இருப்பது மாதிரி, புடைப்பின்றி இமைகள் மூடியிருந்தன. சோழிகளை உருட்டிப் பிரஸ்னம் பார்க்கிறார். கொத்தாக அள்ளித் தரையில் விசிறிவிட்டு, எத்தனை சோழிகள், அவற்றில் நிமிர்ந்திருப்பவை எத்தனை கவிழ்ந்திருப்பவை எத்தனை என்று மிகக் கச்சிதமாகச் சொல்கிறார்.

என் மனைவியின் முறை வந்தது. ‘எந்த ஊரில் போய்க் குடியமர உத்தேசம்’ என்று வினவினார். இவள் சொன்னாள். சுவாமிஜி கொஞ்சநேரம் பேச்சை நிறுத்திவிட்டார். ஏதோ யோசிக்கிறவர் மாதிரி நெற்றியில் வரிகள் ஓடின. தியானம் மாதிரிக் கழிந்த ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, சுவாமிஜி சொன்னதன் சாரம் இதுதான்:

சுவாமிஜி இளைஞராக இருந்தபோது வத்தலக்குண்டுவுக்கு ஒருமுறை போயிருக்கிறார். தனியாக அல்ல. தமது குருவுடன்தான். அந்த ஊரில் பிரம்மாண்டமான விசாலாட்சியம்மன் கோவில் இருக்கிறதல்லவா? அங்கே இருபத்தோரு நாட்கள் பாகவதப் பிரவசனம் செய்தார்கள். குரு உரை நிகழ்த்துவார். இவர் பின்பாட்டு மட்டும். சில நேரம் முழு கீர்த்தனையையும் பாடச் சொல்லிச் சைகை செய்துவிடுவார் குரு. (‘அவருக்குப் பேச முடியாமெ மூச்சிரைக்கும்போது’ என்று சிரித்தார் சுவாமிஜி.)

இரண்டாவது வாரக் கடைசி. அந்த நாளை சுவாமிஜியால் மறக்கவே முடியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஜனங்களெல்லாம் கலைந்துபோன பிறகு, சுவாமிஜியும் குருவும் மட்டும் தனியாக இருக்கும்போது, ஓர் அம்மாள் வந்தாள். குரலை வைத்துச் சொன்னால் நடுவயதைக் கடந்தவளாக இருக்கலாம். குரல் ரொம்பத் தீனமாக இருந்தது. அவள் பிள்ளைக்கு ஏதோ வியாதி வந்திருக்கிறதாம். செரிமானம் சம்பந்தமாக ஏதோ பிரச்னை. டாக்டரிடம் தனியாகச் சென்று விசாரித்திருக்கிறாள். அவர் உதட்டைப் பிதுக்கிவிட்டாராம். ‘அதிக நாள் தாங்க மாட்டான் – வந்திருக்கிற வியாதி காட்டும் அறிகுறிகளைப் பார்த்தால் குடலில் புற்று இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது’ என்று சொன்னாராம்.

எங் கொழந்தையெ எனக்கு மீட்டுத் தாங்கோ ஸ்வாமி.

என்று சொல்லிவிட்டு தாயார் குமுற ஆரம்பித்தாள். குரு எத்தனையோவிதமாக ஆறுதல் சொல்லியும் அடங்காமல் அழுகிறாள்.

பகவானுடைய சித்தத்தை மனிதர்கள் போய் மாற்ற முடியாது அம்மா. நான் அவதூதனும் இல்லை, அவதாரமும் இல்லை. உள்ளே போய் அம்பாளிடம் சொல்லி அழு. அவள் மனசு இரங்குகிறதா பார்ப்போம்.

என்று குரு கறாராகச் சொல்கிறார். அந்த அம்மாள் ஓய மாட்டேனென்கிறாள். ஒரு கட்டத்தில்,

அட, என் காலை விடம்மா. நான் என்ன ஆண்டவனா?

என்று பதறுகிறார். முடிவாக ஒரு கட்டத்தில், கோபமாகக் கேட்கிறார்:

இவ்வளவு மன்னாடறியே? உன் உசிரைக் குடுப்பியா சொல்லு, உன் பிள்ளை உசிருக்குப் பதிலா?

உடனடியாக அழுகை நின்றுவிட்டது.

நிச்சியமாக் குடுப்பேன் சுவாமி. நிச்சியமாக் குடுப்பேன்.

குரலில் இருந்த உறுதியை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. (சுவாமிஜியின் முன்னங்கை ரோமங்கள் நிஜமாகவே குத்திட்டு நின்றதைப் பார்த்தேன்.) குரு சொன்னாராம்:

அப்படியானா ஒண்ணு செய். விசாலாட்சியோடெ வெளிப்பிரகாரத்தை ஒரு மண்டலம் அடிப்பிரதட்சிணம் பண்ணு. பலன் கிடைக்கும்.

அந்த அம்மாள் நமஸ்கரித்துவிட்டு எழுந்து போய்விட்டாள் போல. குரு சுருதி இறங்கிய குரலில் இவரிடம் சொன்னாராம்:

பைத்தியக்காரி. வாழ்க்கெலே இவ்வளவு அடிபட்டு நகர்ந்து வந்திருக்கா. சாவும் வாழ்வும் மனுஷக் கையிலே இல்லேங்கறதைப் புரிஞ்சுக்கலையே இன்னும். புராண காலத்திலே வாழ்ந்திருக்க வேண்டிய பிறவி.

அதற்கப்புறம் ஒரே வாரம்தான். கடைசிநாள் பிரவசனத்தை நடத்த முடியாமலே ஊரைவிட்டுக் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. உச்சிகால பூஜை முடிந்து சாத்திய கோவில் நடையை, சாயங்காலம் திறக்க முடியாமல் போனது. அந்த அம்மாள் காலமாகிவிட்டாள். அந்தப் பிள்ளை என்ன ஆனான் என்று தெரியவில்லை.

எதற்குச் சொல்கிறேன், விசாலாட்சியோட ஸ்தலம் மட்டுமில்லே, இப்படிப்பட்ட மஹாத்மா நடமாடி அடங்கின ஸ்தலமும்கூட அது. அங்கே போய்க் குடியமர்றதுக்கு இன்னொருத்தர்ட்டே யோசனை கேக்கணுமா? அங்கே இருக்கற அத்தனை பேருக்கும் மூணு தாயார் ஆசீர்வாதம் உண்டு.

என்று முடித்தார் சுவாமிஜி. சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சு விட்டார்கள்.

எனக்குத்தான் கடுமையாக மூச்சுத் திணறியது.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum