தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:50 pm

முகப்புரை

குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .

ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.

திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம் 310 எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.

திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.

அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக் கூறுகிறது .

இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும் ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.

யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.

சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 % சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .

ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள் இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.

ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.

தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..

அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .

அந்த சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.

ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.

இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில் கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?

மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.

நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .

விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .



பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு —திருக்குறள் -358


அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம என்கிறார் திருவள்ளுவர் .

மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்

இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு

இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும் விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:51 pm

அதிகாரம் 1 =வீட்டுநெறிப் பால்

—————————————
பிறப்பின் நிலை

============================

1 ) ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்

தோதிய நூலின் பயன் .—–

இறைவனைப் பாடும் பாடலொன்று’ ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே ‘ என்கிறது .’ நாதபிந்து ‘என்கிறார் அருணகிரி நாதர்
இந்த உலகம் தோன்றும் முன்பே ஓசை இருந்தது .
இந்த ஒலியில் இருந்துதான் உலகம் படைக்கப்பட்டது என சாஸ்திரங்கள் கூறுகின்றன .ஒலியில் இருந்து உண்டான உலகம் ஒளியினால் பேணப்பட்டு ,பிறகு ஒளியிலேயே ஒடுங்கி விடுகிறது என்பது சித்தர்கள் கண்ட ஞானம் .

‘ ஓம் ‘எனும் நாதத்தில் இருந்துதான் இந்தப்பிரபஞ்சம் தோற்றிவிக்கப்பட்டது என நமது ஞானிகள் கூறுகிறார்கள் .

எந்தொரு ஓசையை உண்டாக்கவேண்டும் என்றாலும் ,அது மனிதனாக ,இருந்தாலும் ,அல்லது மிருகமாக இருந்தாலும் வாய்தான் ஓசை உண்டாக்கும் கருவி . எந்த ஒரு ஓசையையும் வாயினால் செய்ய வேண்டுமானால் மூன்றுவிதமான இயக்கத்தை வாய் செய்ய வேண்டும் .

வாயைத்திறப்பது (ஆக்கல் )

வாயில் ஒலியை காப்பது (அங்காத்தல் )உரை (காத்தல் )

வாயை மூடுவது . (அழித்தல் )

இந்த மூம்று செயல்களின் வாயிலாகத்தான் ஓசைகள் ,சொற்கள் ,பொருள் ,உரைகள் ,பலன் சொல்நயம் இத்தனையும் விளைகிறது .

ஓம் எனும் ஓங்கார எழுத்தில் மூன்று எழுத்துக்கள் இணைத்திருப்பதை உணர்கிறோம் .அவை அ ,உ ,ம எனும் மூன்று ஒலிகளாகும் .

‘அ ‘எனும் எழுத்து வாயில் ஒளியைக் காத்தலால் பிறக்கிறது .

‘உ’ எனும் எழுத்து உதடுகளை குவித்து ஒலிப்பதால் பிறக்கிறது .

அதாவது திறத்தலின் போது பிறக்கிறது .

‘ம’ எனும் எழுத்து உதடுகள் மூடிய நிலையில் ஒலிப்பது .அதாவது உதடுகளை மூடும் போது ஒலிப்பது .இதைக்கொண்டே படைப்பை ,

மூன்று நிலை என்று கொண்டார்கள் ,படைத்தல் .காத்தல் ,.முடிவு எனக் கொண்டார்கள் சித்தர்கள் .

இனி முதல் குறளைப் பார்ப்போம் .

இதன் பதவுரை 1906 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஔவையார் திருவாய்மலர்ந்த குறள் மூலமும் உரையும் என்ற நூலில் மா .வடிவேலு முதலியார் தொகுத்த புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு தருகிறேன் .

கருத்துரை ,மற்றும், தெளிவுரையை, யான் பல நூல்களை கண்டும் தெளிந்தும் எனக்கு ஏற்ப்பட்ட பட்டறிவின் துணையுடன் ,சித்தர்களின் ஆசியுடன் தர முயற்ச்சிக்கிறேன் .

இந்த குறளுக்கு உரை எழுதப்புகுந்த போது எளிதில் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை ,இருமுறை எழுதியது ஏனோ மறைந்து விட்டது .

பின்னர் அன்னையின் அருகாமையில் வேண்டி அனுமதி பெற்றபின்னே இதைத் தொடர முடிந்தது .

சித்தர்களின் இலக்கியங்கள் அத்தனையுமே ,படிப்பவரின் தன்மையைப் பொறுத்தே அதே தன்னை விரித்துக்காட்டும் ,மேலும் பாவனை மிக முக்கியம் .

இனி பதவுரை

1 ) ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்

தோதிய நூலின் பயன் .–

ஆதியாய் =(இந்த சரீரத்திர்க்கு )முதன்மையாய் ,

நின்ற = இருந்த , அறிவு = அறிவானது ( எனக்கு இதைச்சொல்ல இடம் கொடுத்து ) முதல் எழுத்து =ஆதியட்சரமாகிய (பிரணவத்தை )

ஓதிய =முதலில் உச்சரிக்கின்ற , நூலின் =வேதத்தின்

பயன் =யோசனமாகும் .

உலகில் தோன்றியிருக்கும் மனிதனோ ,விலங்கோ ,அவைகளின் வாயைத்திறந்ததும் வருகின்ற எழுத்து எனன அது ‘அ ‘தானே

அந்த ‘அ ‘தானே உலகின் ஆதியான பிரணவம் எனும் முதலெழுத்தின் முதலெழுத்தாக அமைகிறது .

எனவே ‘ அ ‘என்பதை முதன்மையாகக் கொண்டே அனைத்து நூல்களும் எழுகின்றன .

இங்கு நூல்கள் எனும் போதே எவை தர்மத்தை மட்டுமே போதிக்கின்றனவோ அவைகளை மட்டுமே நூலாகக் கொள்ளவேண்டும் .

பொழுது போக்கும் ,பயனில பேசும் நூல்கள் ,இங்கே எடுத்துக்காட்டப்பெறவில்லை .

எனவே முதலெழுத்தோதிய நூலின் பயன் .–யாது என்றால் ,
ஆதியாய் நின்ற வறிவு யாது என அறிவதே .

அப்போது ஆதியாய் நின்ற அறிவு என்பது எனன ?
அறுதி உண்மை ,எல்லையற்ற உணர்வு ,எல்லையற்ற அறிவு ,
எல்லையற்ற ஆற்றல் .எல்லையற்ற ஆனந்தம் இவற்றை தன தன்மைகளாகக் கொண்ட எல்லையற்ற அறிவின் இருப்பிடமான
கடவுள் எனும் எல்லையற்ற உணர்வுப்பொருள் நம் அனைவரிடத்திலும்
ஆன்மாவாக ஆதியாக நின்ற அறிவாக அனைவர் உடலிலும் இருக்கிறது .
அதை உணர்வதே அறிவின் பயன் .

இதையே ஔவை உடலுக்கு மட்டுமின்றி இந்த உலகின் ஆதியாக நின்ற அறிவு என்று கொண்டிருப்பாரானால்

உலகின் ஆதியாக அறிவு என்பது ஆதியாக இருந்த ஒளியைப் பற்றி அறிவதே.

ஒலி என்பது எனன ?
அதுவே சூக்ஷும பிரணவமாக உலகில் சூழ்ந்து நிற்கிறது .அதில் இருந்தே இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டது .

எனவே உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளும் வாயைத்திறந்த மாத்திரத்தில் வெளிவரும் முதல் சொல்லான’ அ ‘ எனும் எழுத்தை முதலாகக் கொண்டு எழுந்த அனைத்து நூல்களின் பயன் , உலகம் தோன்றுவதற்கு காரணமான ஓம்காரத்தை புரிந்துக் கொள்வதே அதுவே அ ,உ ,ம என ஆக்கள் அழித்தல் காத்தல் எனும் முப்பெரும் சக்தியாகவும் விளங்குகிறது .

நமது உடலில் அதுவே ஆதியாக அமைந்த அறிவின் பொருள் ஆன்மாவாக விளங்குகிறது என்பதுவே .

அண்டத்தில் உள்ளதுதானே பிண்டத்திலும் உள்ளது ?

இதையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
வள்ளுவர் திருக்குறளில் தனது முதல் குறளில்
எனன கூறுகிறார் பாருங்கள் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

( குறள் எண் : 1 )

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

ஆனால் நமது சித்தர் ஔவ்வைப் பிராட்டியோ ‘ அ ‘எனும் எழுத்தை வெளிப்படையாகக் கூறாமல் , உலகின் ஒசைக்கெல்லாம் முதலெழுத்து என நயம்படக் கூறுகிறார் .

ஆதிபகவன் என்று கூறாமல் ஆதியாக நின்ற அறிவு என்கிறார் .

இதுவே சித்தமரபுக்கு உள்ளத் தனித்தன்மை .

இதைக் கொண்டு ஔவையின் குறள் இயற்றப்பட்டகாலம் அறிய இயலுமா ?
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:52 pm

முதல் பால் —வீட்டுநெறிப் பால்

——————-—————————————
அதிகாரம் ௧ ( 1 ) பிறப்பின் நிலை

============================
ஔவையின் முதல் குறள்

நூல்கள் கற்பதன் பயன் “ஆதியாய் நின்ற அறிவினை ” உணர்வதே என்று இயம்பி தொடங்கியது . திருவள்ளுவரின் திருக்குறள் போல் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்பதற்காக பத்துக்குறள்கள் எனப் பரவாமல் பிறப்பின் நிலைஎனும் பொருளுக்கு நேரே அடுத்ததாக எடுத்துச் செல்கிறது .

எதை அறிந்தால் வேறு எதையும் அறியத்தேவை இல்லையோ , பிறகு எந்த பிரம்மஞானமே உலகின் அத்தனை அறிவையும் தந்து விடுமோ ,அத்தகைய ஞானம் முழுவதையும் விரைவில் சூத்திரம் போல் சுருக்கமாக வரிசையாக எடுத்துக் கூற ஆரபித்துவிடுகிறது ஔவையின் குறள்..
இனி ஔவையின் அடுத்தக் குறளைப் பார்ப்போம் .

2 ) பரமாய சக்தியுட் பஞ்சமா பூதத்
தரமாறிற் தோன்றும் பிறப்பு

பரம் = பரம் பொருளிடத்தில்
ஆய = உண்டான
சக்தியுள் = பராசக்தியிலடங்கிய
பஞ்சமாபூதம் = ஐந்து பெரிய பூதங்களும்
தரமாறிடில்= தங்களில் ஒன்றொன்று மாறினால் ,
பிறப்பு – இந்த ஜனனமானது
தோன்றும் = உண்டாகும் .

அனாதினானத் தோற்றமாக விளங்கும் உத்தமமான இப்பிறப்புமான இகம் அல்லது இம்மையும் ,
வரும்பிறப்பான மறுமை அல்லது உம்மையும் ,
முப்பிறப்பான மும்மையும் ,
ஒருபிறப்பான ஒருபவம் ,
எப்பிறப்புமான எம்மை ,
எழுபிறப்பான எழுமை ,
இவை அனைத்தும் பராபவையான பராசக்தியின் அருளால்
நிலம் நீர் ,தீ , காற்று ஆகாயம் ஆகிய பஞ்சமாபூதங்களின் கூட்டால்
பஞ்சீகரணம் என்னும் மாறியக் கூட்டால் இந்த உடல் உண்டாகிறது .

பஞ்சீகரணம் என்றால் எனன என்பதைப் பற்றி நான் முன்பு எழுதிவந்த
‘எனக்குப்புரிந்தது இதுவே ‘ எனும் “மனிதனின் மானுவல் “தொடரில் விரிவாக எழுதிவந்தேன் .

அதுவிரைவில் புத்தகமாகவும் வெளிவர இருக்கிறது எனினும் ஆர்வமுடன் இதைப் படிக்கும் பல புதிய நண்பர்களுக்காக
அவைகளைச் சுருக்கமாக இங்கேயும் தருகிறேன்

இது ” எனக்குப்புரிந்தது இது” வேயின் ஒரு சிறியபகுதி

இதுவரை உலகில் விஞ்ஞான அறிஞர்கள் கண்டது மொத்தம் நூற்றுப் பதினேழு மூலங்கள்(elements); ஆனால்
நம் மெய்ஞான சித்தர்களுக்கோ மொத்தமே எல்லாமே ஐந்துதான் .

ஆகாயம் ,வாயு , நெருப்பு, நீர் , மண்
இவையே பூதங்கள் ஐந்து இவைகளையே மொத்த மூலங்கள் ஐந்துஎனக் கொண்டது சித்தர் அறிவியல் .

இவையே தனித்தும் இணைந்தும் ஆகின்றன உலகப்பொருட்கள் யாவையுமாய் அவைகளே ஆகின்றது அதுவே நமது மேனியுமாகவும் அமைகிறது .
இதையே ஔவையும் பஞ்சமா பூதங்கள் என விவரிக்கிறார் .
பின் அவை ” தரமாறிற்தோன்றும் பிறப்பு “ என்கிறார் .

ஐம்பூத ஆற்றல்களும் பதினைந்து பகுதிகளாக, ஒரு கணக்குடன் பிரிந்து ஆகின்றன இந்த மேனியாக என்று சித்தர்கள் கண்டனர் .

மண்ணின் ஐந்து பாகம் உறுப்புகள் -
மெய் ,வாய் ,கண் ,மூக்கு செவி என ஐந்து ஆகியது .
தண்ணீரின் நான்கு பாகம் – கண்ணில் சுரக்கும்
விழி நீர் , உள்முகமாக சுரக்கும் நிலவமுது ,
சூரிய அமுது , நாத ஜலம் என்னும் உயிரின் ஆற்றல் என ஆகியது .

நெருப்பின் மூன்று கூறுகள் – வலக் கண்ணில்
சூரிய ஒளி, இடக்கண்ணின் சந்திர ஒளி ,
மற்றும் மூலக்கனல் ஆகிய ஜாடராக்கினி என்று ஆகியது .

காற்றின் இரண்டு கூறுகள் – பிராண வாயுவும் ,
அபான வாயுவும் என ஆகியது ஆகாயத்தின் கூறு
தலையில் இருக்கும் துவாதசாந்தப் பெருவெளி என உச்சியில் நின்றது .

இவைகள் மட்டுமா ? நமது உடம்பின் ரத்தம்,தசைகள், தோல், நரம்பு ,கோபம் ,தாபம்,நடத்தல் ,வினையாற்றல் அத்தனையும் ஐம்பூத ஆற்றலே .

இத்தனையும் ஒன்றுடன் ஒன்று
முறையுடன் இணைந்து ,வேறுவேறு விகிதத்தில்ஆகிறது வெவ்வேறு பொருட்களாக . இத்தகைய இரசாயன மாற்றத்திற்குப் பெயரே பஞ்சீகரணம் .
இதையே ஔவை “தரமாறிற்தோன்றும் பிறப்பு “என்கிறார்

மண்ணுடன் மண் சேர ஆவது எலும்பு .
மண்ணுடன் நீர் சேர ஆவது தசைகள் .
மண்ணுடன் நெருப்புச் சேர ஆவது தோல் .
மண்ணுடன் வாயு சேர ஆவது நரம்பு .
மண்ணுடன் ஆகாயம் சேர ஆவது ரோமம் .

காற்றுடன் மண் சேர ஆவது உமிழ் நீர் .
காற்றுடன் நீர் சேர ஆவது சிறுநீர் .
காற்றுடன் நெருப்புச் சேர ஆவது வியர்வை .
காற்றுடன் வாயு சேர ஆவது ரத்தம்
காற்றுடன் ஆகாயம் சேர ஆவது சுக்கிலம் /சுரோணிதம் .

நெருப்புடன் மண் சேர ஆவது பசி .
நெருப்புடன் நீர் சேர ஆவது தாகம் .
நெருப்புடன் நெருப்புச் சேர ஆவது நித்திரை .
நெருப்புடன் வாயுச் சேர ஆவது சோம்பல் .
நெருப்புடன் ஆகாயம் சேர ஆவது ஆண்பெண் சங்கமம் .

வாயுவுடன் மண் சேர ஆவது கிடத்தல் .
வாயுவுடன் நீர் சேர ஆவது நடத்தல் .
வாயுவுடன் நெருப்பு சேர ஆவது மடக்கல் .
வாயுவுடன் வாயு சேர ஆவது ஓடுதல் .
வாயுவுடன் ஆகாயம் சேர ஆவது குதித்தல் .

ஆகாயத்தில் மண் சேர ஆவது விருப்பு .
ஆகாயத்தில் நீர் சேர ஆவது வெறுப்பு .
ஆகாயத்தில் நெருப்புச் சேர ஆவது அச்சம் .
ஆகாயத்தில் வாயுச் சேர ஆவது வெட்கம் .
ஆகாயத்தில் ஆகாயம் சேர ஆவது மோகம் .

இதுதான் உடலின் ரசாயனம் !
இப்போது மீண்டும் ஒருமுறை அந்த அர்த்தமுள்ளக் குறளைப் பார்ப்போம் .

பரமாய சக்தியுட் பஞ்சமா பூதத்
தரமாறிற் தோன்றும் பிறப்பு

இந்த இரண்டடியில் எத்தனை பொருள் பொதிந்திருக்கிறது என்பது
வியப்பாக இருக்கிறது அல்லவா ?

சித்தர்களின் அத்தனை ஞானத்தையும் தன இரண்டடிக் குறளில் எத்தனை விளக்கமாகக் கூறியிருக்கிறார் என்பதற்கு இனி அடுத்தக் குறளைப் பார்ப்போமா?
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:53 pm

முதல் பால் —வீட்டுநெறிப் பால்

——————-—————————————
அதிகாரம் ௧ ( 1 ) பிறப்பின் நிலை

============================
இதுவரை ஔவையின் ஞானக் குரலில் முதல் இரண்டு குறள்களைப் பார்த்தோம் .முதல் குறள் அனைத்து அற நூல்களைப் படிப்பதின் பயன் ‘ஆதியாக நின்ற அறிவை உணர்வதே’ என்றது .இரண்டாவது குறள் பரம்பொருளின் சக்தியுடன் கூடிய அனைத்துப் பிறப்புக்களும் ஐம்பூதங்களையும் ,அது பல விகிதத்தில் மாறி மாறி ‘தரமாறிடில்’, பஞ்சீகரணம் எனும் வினை கொண்டு பிறப்பு அமைகிறது என்றது .

நூல்கள் படித்ததின் பலன்கள் மற்றும் பிறப்பு எவ்வாறு அமைகிறது எனக் கூறியபிறகு ,

பிறப்பு என்பது எவ்வாறு வாழ்வின் துயரங்களில் சிக்குகிறது ,வாழ்வின் இலக்கு எனன ,பிறப்பின் புருஷார்த்தம் எனும் பயன் தான் எனன என்பதை அடுத்த இரண்டு குறள்களும் சுருக்கமாக சூத்திரம் போல் குறுகத்தறித்துக் கூறுகிறது .

குறள் எண் 3

“ஓசை பரிச முருவஞ சுவை நாற்றம்
ஆசை படுத்து மளறு

ஓசை = சத்தமும்
பரிசம் =ஸ்பரிசமும்
உருவம் = ரூபமும்
சுவை = ரசமும்
நாற்றம் = கந்தமும்
(ஆகிய தன்மாத்திரைகள் )–
ஆசைபடுத்தும் = ஆசையில் சம்பந்தப்பட்டால்
அளறு = சேறுவாகும்
பஞ்ச தன்மாதிரைகளே ஆசையுடன் சம்மந்தப்படும் போது அவை சேறு ஆகும்

பஞ்ச மாபூதங்களினால் உண்டான இவ்வுடலில்
பஞ்சமாபூதங்களில் ஆகாயம் எனும் பூதம்
ஓசை எனும் சப்த தன்மாத்திரையை உண்டாக்குகிறது .

வாயு எனும் பூதம் ஸ்பரிசம் எனும் தன் மாத்திரையை உண்டாக்குகிறது .

தேயு எனும் அக்னி எனும் பூதம் உருவம் எனும் தன்மாத்திரை
உருவாகக் காரணம் ஆகிறது .

அப்பு எனும் நீர் எனும் பூதம் சுவை எனும் தன்மாத்திரை உருவாகக் காரணம் ஆகிறது .

பிருத்திவி எனும் நிலம் என்ற பூதம் , நாற்றம் எனும் தன்மாத்திரை உருவாகக் காரணம் ஆகிறது .

ஆக பஞ்ச பூதங்களும் பஞ்ச தன்மாத்திரைகளை உருவாக்குகின்றன

இந்த பஞ்ச தன்மாத்திரைகள் தனித் தனியே மனதுடன் சேர்ந்து ஞானேந்திரியங்களான மெய் ,வாய் கண் மூக்கு செவி இவைகளுடனும் கர்மேந்திரியங்களுடனும் இணைந்து எல்லா செயல்களையும் புரிகின்றன .
ஆனால் இவைகளுடன் ஆசை எனும் வேகம் சேரும் போது இந்த தன்மாத்திரைகளும் ,இந்திரியங்களும் புரியும் செயல்கள் உலகாயமான மாயச் சேற்றில் சிக்கி உழலச் செய்கிறது .

இங்கு ஆசை என்பது நமது வினையின் சஞ்சித கர்மத்தாலும், பிராரர்த்தம் எனும் நடைபெறும் கர்மச் சுமையாலும் ஏற்படுகிறது .

பூர்வப் பிறப்பின் எச்சங்கள் ஆசைகளை ஏற்படுத்தும் காரணியாக அமைகிறது. ஆசைகளை ஏற்படுத்தும் சூழ்நிலைகளும் தானே ஏற்படுவதில்லை. அவை நமது கர்ம வினையைப் பொருத்ததே .

முன்பு கண்டதையேக் காண்பதும் ,முன்பு தின்றதையேத் தின்னத் தூண்டுவதும் ஆசையின் இயல்பு ,இதுவே மனிதனின் இயல்பு .
ஆசையில் இருந்து விலகி நிற்பது என்பது மனம் பொருந்தி நிற்க நாம் ஏற்படுத்தும் மாற்று ஏற்பாட்டைப் பொருத்ததே ஆகும் .

எனவே ஆசை எனும் வேகம் நமது புலன்களுடன் சம்பந்தப்படாத போது செயல்களில் ஒரு உத்தமத் தன்மை ஏற்படுகிறது .

மேலும் கரமச் சுமை ஏற்படுவதில்லை .இதையே ’வேகம் கெடுத்தாண்ட’ என்கிறார் மாணிக்க வாசகப்பெருமான் .

மனம் ஆசை வயப்பட்டு இந்திரியங்களுடன் பொருந்தி செயல் படும் போது உலக பந்தம் ஏற்படுகிறது .

‘ஆசை அறுமின்’ எனக் கூறிவிட்டு இனி அடுத்தக் குறளைக் காணலாம் .
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:54 pm

முதல் பால் —வீட்டுநெறிப் பால்

அதிகாரம் ௧ ( 1 ) பிறப்பின் நிலை

உடலின் 96 தத்துவங்களில் ஐந்து தன்மாத்திரைகள் ஆசையுடன் கூடி, புலன்களுடன் செயல்படும் போது வாழ்வு குழப்பமடைகிறது என்பதை முந்தையக் குறளில் கண்டோம்.

அதைப் படித்த சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசி சில வினாக்களை எழுப்பினார்கள். ஆசையில்லாத மந்த நிலை தான் வேதாந்தத்தின் லட்சியமா? வாழ்வை அப்படித்தான் நடத்த வேண்டுமா? என்று வினவினார்கள். அவர்கள் கேட்ட வினாக்களில் அர்த்தமிருந்தது .

நான் அவர்களுக்கு அளித்த பதிலை உங்களுடன் பகிர்ந்து கொண்டு மேலேப் போவது உசிதமாகும் என எண்ணுகிறேன். அப்படி ஆசை இல்லாமல் செயலற்று இருப்பதானால் நம்மைச் சுற்றி இருக்கும் கல்லும், மரங்களும் சிறந்த ஞானிகள் ஆகி விடுமே? என்பது எனது பதில் வினாவாக அமைந்தது.

அவைகள் தான் எப்போதும் ஒன்றும் செய்வது கிடையாதே! எந்த ஆசையும் அவைகளுக்கு இருப்பது போல் தோன்ற வில்லையே! ஔவை விளக்க விரும்பியது அப்படி இல்லை. வாழ்க்கை என்பது செயல்களால் ஆன செங்கல் கட்டிடம். செயல் இல்லாத வாழ்கை இல்லை. பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், செயல்புரிவதற்கு பொதுவாக நாம் கொள்ளும் ஆசை கூட இல்லாமல் எப்படி செயல் படுவது என்று? செயலில் உணர்வும் உணர்ச்சியும் வேண்டாமா? என்று கேட்க்கிறார்கள். ஆனால் செயல் புரியும் போது, ஆசை எனும் உணர்வு குறையும் போது தான் நம்மிடம் அமைதி பெருகுகிறது. செயல் அதிகம் ஆகிறது.

உண்மையான செயல் முறை என்பது, எனன நடந்தாலும் சம நிலைக் குறையாத, கலங்காத, நிரந்தர அமைதி கொண்டிருப்பவரிடத்து மட்டுமே சிறப்பாக அமையும். இந்த உலகின் மிகச் சிறந்த செயல் வீரர்களை, அவர்களின் வாழ்வை ஆராய்ந்தால், அவர்கள் அற்புதமான அமைதி கொண்டவராகவே இருப்பார்கள். அமைதியான, மன்னிக்கக் கூடிய, சம நோக்குடைய, நிலை குலையாத, மனம் உடையவனே அதிக மதிப்புள்ள செயல்களை எளிதில் செய்ய முடிகிறது. ஆசையோ அதைத் தொடர்ந்த ஏமாற்றமோ, கோபமோ இருக்கும் இடத்தில் ஆற்றல் நஷ்டம் தான் உண்டாகிறது. கிரிக்கெட்டில் கூட அமைதியாக சம நிலையில் உள்ள, பதற்றம் இல்லாத வீரர்கள் மட்டுமே அதிக ஓட்டங்களையும், வெற்றிகளையும் பெற முடிகிறது. வெற்றிக்கும் சாதனைக்கும் தேவை அமைதியும், பதறாத தன்மையுமே தவிர உணர்ச்சி வேகம் அல்ல. அது செயல் புரியும் சக்தியில் நஷ்டத்தைத் தான் ஏற்படுத்தும். ஆசை என்பது உயர்ந்த லட்சியங்களை குறித்து நோக்கம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் செயல் புரியும் போது, அந்த ஆசையின் வேகம், உணர்வு வெளிப்பாடு இல்லாமல், அமைதியும், சம நிலையும் கொண்டு செயல் பட வேண்டும்.



அடுத்த குறள், வாழ்வின் பயன்கள், புருஷார்த்தங்கள் எனன என்பதை விளக்குகிறது. சிறுகச் சிறுக ஞானத்தின் மையப் பகுதிக்கு இட்டுச் செல்கிறது.

தருமம் பொருள் காமம் வீடெனும் நான்கு முருவத்தாலாயபயன்



தருமம் = தர்மம் ,அறம்

பொருள் = செல்வம்

காமம் = இன்பம்

வீடு = வீடுபேறு

எனும் = என்று கூறப்படும்

உருவத்தால் = இந்த மேனியால், உடலால்

ஆய = உண்டான

பயன் = பயன்பாடு



அறம், பொருள் இன்பம் ,வீடுபேறு இவைகளே இந்த தேகம் பெற்றதன் பயன் என்கிறார் இந்தக் குறளில் சித்தர் ஔவையார்.

எவ்வளவு எளிதாக பொருள் இருக்கிறது போல் தோன்றுகிறது. திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என வகுத்தார். ஔவை அறம், பொருள், இன்பம், வீடு இவையே இந்த மேனி பெற்றதின் பயன் என்கிறார். ஆனால் ஔவை கூற வந்தது மேம்போக்காகத் தெரியும் அறம்,பொருள், இன்பம், வீடு எனும் உலகாய அர்த்தத்தில் அல்ல. இன்னும் கொஞ்சம் ஆழமான ஞானப் பொருள் படைத்தது இந்தக் குறள்.

சந்தேகம் இல்லாமல் இந்த உலகம் சில தர்மங்களால் மட்டுமே இயங்குகிறது. தர்மங்கள் தவறும் போது, இயற்கை கோபம் கொள்கிறது. அறம் என்பது தர்ம நியாயங்கள் நியதிகளே தவிர, பிறருக்கு ஈயும் தானம் மட்டுமல்ல. எனவே தான், தான தர்மம் எனக்கு கூறப்படுகிறது. தானம் என்பது தர்மங்களில் ஒன்று, தானம் என்பது ஒருவித தியாகம். ஆனால் இங்கே குறிப்பிடப்படும் தர்மம் அத்தகைய தர்மங்கள் அல்ல. இது ஆன்மாவை அறியும் தர்மம், ஆன்மாவை அறியும் இயல்பு. அதுவே மனிதனின் மாறுதலற்ற இயல்பு. ஆன்மாவே, ’தான்’ என அறியும் தர்மம் தான் உண்மையான தர்மம். அதுவே பிறவியின் பயன்.

பொருள் எனக் கூறப்படுவதும் வாழ்க்கை நடத்த அறவழி செல்ல தேவைப்படும் பொருள் மட்டுமல்ல. அற வாழ்வு நடத்த அத்தகைய பொருளும் மிகவும் தேவையான ஒன்றுதான். ஆனால் வள்ளுவர் கூட அருள்நிலை வேறு, பொருள் வேறு என்கிறார். ஔவை கூற விழையும் பொருள், இந்த மேனியில் அமைந்த மகத்தான செல்வத்தை, அதன் பொருளை உணருவதே ஆகும்.

காமம் என்று ஔவை கூறுவதும் உலகியலின் ஆசை காமத்தை மாத்திரம் குறிப்பிடுவதல்ல. உலகப் பெருக்கத்திற்கு காமம் அவசியமே. ஆனால் இங்கு ஔவை கூறும் ஞான விளக்கம் ஆசை என்பது உடலில் இருக்கும் உறுப் பொருளை அறியும் ஆசையே ஆகும். வாழும் போது வீடு பெற அனைவரும் முயலுகின்றனர். தினமும் வெளியே சுற்றி அலைந்து பின் வீடு சேர்வதையே ஒய்வு என்று எண்ணுகின்றனர். தினமும் செயல்கள் முடிந்து புறப்பட்ட இடத்தைப் போய் சேருகிறோம். அதையே வீடு என்கிறோம்.

ஆனால் மீண்டும், மீண்டும் பிறந்து தொடரும் இந்த நீண்ட பயணம் முடியும் போது, பிறவாமை நேரும் போது, இருக்க ஒரு வீடு வேண்டாமா? இந்தப் பயணம் புறப்பட்ட போது எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போய்ச் சேர வேண்டாமா? அத்தகைய வீடு ஒன்றை வாழும் போதே தயார் செய்து கொள்ள வேண்டாமா? அதையே வீடு என்கிறார் ஔவை இந்தக் குறளில். அதுவே இந்த உடம்பு பெற்றதின் பயன். இதுவே தேட வேண்டிய செல்வம். உடலில் வாழும் போதே அதற்கான நெறிகளைக் கடைபிடித்தலே வீட்டு நெறி எனப்படுகிறது.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:55 pm

5) நிலமைந்து நீர்நாங்கு நீடங்கி மூன்றே
யுலவையிரண் டொன்று விண்


நிலம் = பிருத்துவி எனும் நிலம்
ஐந்து = ஐந்து பகுதி ஆகவும்
நீர் = அப்பு எனும் நீர்
நான்கு = நான்கு பகுதியாகவும்
நீடு = நீண்ட
அங்கி = தேயு எனும் நெருப்பு
மூன்று = மூன்று பகுதியாகவும்
உலகை = வாயு எனும் பூதம்
இரண்டு = இரண்டு பகுதியாகவும்
விண் = ஆகாயம் எனும் பூதம்
ஒன்று = ஒரு பகுதியாகவும்

பஞ்ச பூதங்களான நிலம் ஐந்து பங்குகளாகவும் , நீர் நான்கு பங்குகளாகவும், நெருப்பு மூன்று பங்குகளாகவும் ,வாயு இரண்டு பங்குகளாகவும் ,விண் ஒரு பங்காகவும் உடையது இவ்வுடல் என்பதே இக்குறளின் மையக் கருத்தாகும்.

இதையே வேறு சில உரையாசிரியர்கள் நிலமைந்து என்றதும் குறிஞ்சி, முல்லை,மருதம் ,நெய்தல் பாலை ஆகிய ஐந்து நிலைகளில் நிலம் அமைந்துள்ளது எனவும் பொருள்படும் படிக்கூறுகின்றனர் .

ஆயினும் இந்த முதல் அதிகாரம் பிறப்பின் தன்மையினைக கூறி வருவதால் முதலில் அளிக்கப்பட்டுள்ள பொருளே பொருத்தமாக இருப்பதாகத் தெரிகிறது.


6 ) மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து

மாயன் = திருமாலும்
பிரமன் = பிரமனும்
உருத்திரன் = RUTHTHIRANUM
MAGESAN =மகேசனும்
ஆயும் = வேதங்களினால் ஆராயப்படும்
சிவமூர்த்தி = சதசிவனான
ஐந்து = பஞ்ச மூர்த்திகளாவார்கள்.

திருமாலும் ,பிரம்மனும் உருத்திரனும் .மகேசுவரனும், சிவனும் பஞ்ச மூர்த்திகளாவார்.

பிருத்திவிக்கு பிரம்மனும் ,அப்புவிற்கு திருமாலும் ,தேயுவுக்கு உருத்திரனும், வாயுவிற்கு மகேசனும் ,ஆகாயத்திற்கு சிவனும் அதிபர்களாவார்கள்.


7 ) மாலயங்கி யிரவி மதியுமையோ
டேலுந திகழ் சக்தியாறு

ஏலும் = பொருந்திய
திகழ் = விளங்குகின்ற
சக்தி = சக்திகள்
மால் = திருமால்
அயன் = பிரம்மா
உத்திரன் =உருத்திரன்
இரவி = சூரியனும்
மதி = சந்திரனும்
உமை =உமா தேவியும்
ஆறு = ஆகிய அறுவராம்

சக்திகள் அறுவர் உடலில் இருப்பதாகக் கூறுகிறது இந்தக் குறள்

திருமாலின் சக்தியாகிய இலக்குமியும் ,பிரம்மாவின் சக்தியாகிய சரசுவதியும் ,அக்னியும் சூரியனும் ,பார்வதியும் இந்தத் தேகத்தில் பொருந்திப் பிரகாசிக்கின்ற ஆறு சக்திகளாக இருக்கின்றனர்.

ஞான சாதனைக்கும், இலட்சியத்திற்க்கும் இலக்குமியும், அறிவுக்கு சரசுவதியும், அஞ்ஞான இருளை நீக்கவும் , பிராணனுக்கு வலிமை சேர்க்கவும் அக்னியும் ,பிரம்மத்தைக் காட்ட சூரியனும் ,தேகத்தை வளர்க்கவும் ,மனதின் வலிமையைக் கூட்ட சந்திரனும், ஞானம் பெறுவதற்கு உமை அன்னையும் உள்லொளியுடன் உயிறாற்றல் சக்தியாக விளங்குகிறார்கள் எனலாம்

இன்னும் நிறைய குறள் ஆழமான ஞானத்தின் திறவு கோலாக அடுத்து அடுத்து இருப்பதால், சற்று சுருக்கமாகவே முதலில் வரும் குறள்களைக் காணலாம் என நினைக்கிறேன் .எனினும் தேவைப் படும் இடங்களில் விரிவாகவே பொருளை விளக்க முயல்கிறேன் .சித்தர்களின் திருவருள் கூடின் மீதியை அடுத்து காணலாம் .
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:56 pm

8 ) தொக்குதிரத் தொடுன் மூளைநிணமென்பு

சுக்கிலந் தாதுகளெழு

தொக்கு = தோலால் போர்த்த

தேகம் உதிரம் = குருதி, ரத்தம்

ஊண் = தசை

மூளை = மூளை

நிணம் = கொழுப்பு

என்பு = எலும்பு

சுக்கிலம் = உயிர்சத்தி ,சுக்கிலம் அல்லது சுரோணிதம்

தாதுக்கள் ஏழு = ஆகியவை ஏழு தாதுககளாகும்

இந்த தேகமானது தோலும் ,இரத்தமும் ,ஊனும் ,மூளையும் கொழுப்பும் ,எழும்பும் ,சுக்கிலமும் ஆகிய ஏழு தாதுக்களால் ஆகியது .



9) மண்ணோடு நீரங்கி மதியோடு காற்றிரவி

விண்ணெச்ச மூர்த்தியோடெட்டு
மண் = நிலம் எனும் பிருத்வி

நீர் = தண்ணீர் எனும் அப்பு

அங்கி = தீ எனும் தேயு

மதி = சந்திரன்

காற்று = வளி எனும் வாயு

இரவி = ஞாயிறு எனும் சூரியன்

விண் = வானம் எனும் ஆகாயம்

எச்சமூர்த்தி = உடலில் வேள்வி தீயாக விளங்கும் ஆன்மா

எட்டு = ஆகிய எட்டு மூர்த்திகள் உடலில் இடம் பெற்றுள்ளன
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன் சந்திரன் ஆகியுடன் உடல் செய்கின்ற வேள்வியில் உயிர்ப்பு வடிவாக இருக்கும் ஆன்மாவை சேர்த்து உடலில் எட்டு ஈசத்துவம் உண்டு என்கிறது இந்தக்குறள்.
“வெய்யாய் தனியாய் இயமானாம் விமலா”என்கிறது சிவ புராணம்.
10) இவை யெல்லாங்கூடி யுடம்பாய வொன்றி னவை

யெல்லா மானது விந்து
இவை எல்லாம் = இதுவரை சொன்ன இவை எல்லாம்

கூடி = சேர்ந்து

உடம்பு ஆய = இந்த சரீரமான

ஒன்றின் = ஒரு பொருளின்

எல்லாம் = யாவையும்

ஆனது = உண்டானது

விந்து = இந்த உடலின் கரு ஆனது .
பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், நான்கு புருஷார்த்தங்கள், பஞ்ச மூர்த்திகள், ஆறு சக்திகள், ஏழு தாதுகள், எட்டு ஈசத்துவங்கள் ஆகிய இவை எல்லாம் கூடிய விந்து வின் காரணமாக இந்த உடல் உண்டானது என்கிறது இந்த குறள்.
விந்து எனும் சொல் புள்ளி வட்டம், தாது என்கிற பொருளை உணர்த்தும்.
ஒரு மையப்புள்ளியில் இருந்து பல வட்டங்கள் தோன்றுகின்றன. முதல் வட்டத்திற்கு ஒரு மையப்புள்ளி இருந்தே தீரும். பல வட்டங்கள் தோன்றினாலும் மையப்புள்ளி ஒன்றாகவே இருக்கிறது. ஒரு சுக்ஷுமமான ஆன்மாவில் இருந்து இந்த தேகம் தோன்றுகிறது.மேலே சொன்ன அத்தனையும் (பஞ்ச பூதம், தன்மாத்திரை முதலியவை)பலவட்டங்கள் ஆனாலும் மையப்புள்ளியாக ஆன்மா இருக்கிறது. இத்தகைய சூக்ஷும ஆன்மா பூமியில் இடம்பெற ஒரு சிறிய மூலத் தாது அவசியம். இவை இரண்டும் சேராவிட்டால் இந்த தேகம் அமைய வாய்ப்பில்லை.
இத்துடன் ஔவையின் ஞானக் குறளின் முதல் பாலான வீட்டு நெறிப் பாலின் முதல் அதிகாரம் முடிவடைகிறது.
அடுத்து உடம்பின் பயன் எனும் பொருள் பற்றி அடுத்து அதிகாரம் பத்துக் குறளில், உடல் பெற்றதன் பயனை விவரிக்கிறது. அதை அடுத்து வரும் பகுதியில் பார்க்கலாம்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:57 pm

வீட்டு நெறிப் பால்

அதிகாரம் 2 – உடம்பின் பயன்

சிறிய இடைவெளி இந்தத் தொடரில் விழுந்து விட்டதால், சிறியதொரு முகவுரையுடனேயே மீண்டும் ஆரம்பிப்பதே உசிதம் என நினைக்கிறேன்.

சற்று ஆழச் சிந்தித்துப் பார்க்கும் போதே, நாம் வாழும் இந்தப் பிரம்மாண்டப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான மனித உடலைக் கொண்டு நாம் வாழும் வாழ்க்கை என்பதன் பொருள்தான் என்ன ? என்ற எண்ணம் மேலிடுகிறது.

வாழும் வாழ்வின் உண்மையான, முழுமையான நோக்கம்தான் என்ன? தேடிச் சோறு நிதம் தின்று, வேடிக்கைக் கதைகள் பேசி வாழ்ந்து மடிவது மட்டும் தானா?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனித குலம் மேற் கொண்டு வந்த உழைப்பு, தவம், ஈடுபாடு, அனுபவம், அவற்றால் பெற்றுத் தொகுத்து வந்த பாரம்பரிய அறிவு, இவற்றால் உருவான மனிதப் பாரம்பரியத்தின் தத்துவம், சமயம் சமுதாயம், நீதி, கலை, பொருளாதாரம், அரசியல், பொருளாதாரம் இவை அத்தனையுமே இன்று பழமையாகப் பலருக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது.அத்தனையும் சந்தேகத்திற்க்குரியவையாக,கேள்விக்குகந்ததாக மாறி விட்டது. அத்வைத, துவைத்த தத்துவ விசாரங்கள் என்பவை பொழுது போகாத சோம்பேறிகளின் வேலையற்றவர்களின் பொழுது போக்கு என்று பலராலும் இப்போதெல்லாம் எண்ணப்படுகிறது. ஆன்மீகத்திலும் நடைமுறை வாழ்க்கையிலும் இருந்த இணைப்பு விடுபட்டுப் போய் விட்டது .

ஆன்மிகம் என்பதும் நடைமுறை வாழ்வு என்பதும் வேறுவேறு என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது. சமயம் பக்தி என்பவை குழந்தைத் தனமான மூட நம்பிக்கை, நீதி சத்தியம் என்பவை சக்தியற்றவர்களின் சொந்தம், அமைதி ,பொறுமை அடக்கம் இவைகள் பலஹீனங்களின் அடையாளம், விசுவாசம் ,கவுரவம் இவைகள் அடிமைத் தனத்தின் மீதங்கள், இவை போன்ற கருத்துக்களே இன்று பெரும்பாலோரின் நம்பிக்கையாக அமைந்து விட்டது

விஞ்ஞானம் சுகம், போகம், சாதனை, சௌகரியம் இவை அத்தனையையும் இப்போதைய வாழ்வில் எளிதாகப் பெற்றுத் தருகிறது. விஞ்ஞானத்தில் செல்வாக்கு தனி மனித வாழ்க்கையில், சமுதாயத்தில், குடும்ப அமைப்பில் ஊடுருவி அங்கே கற்பனைக்கு மிஞ்சிய புரட்சியை ஏற்படுத்தி விட்டது .

பாரம்பரியமாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வந்த சம்பிரதாய எல்லைகளை மீறும் தைரியத்தை விஞ்ஞானம் இப்போது வழங்குகிறது. தெய்வம், நீதி, தர்மம் ஆகிய விலங்குகளில் இருந்து விடுதலை பெற்று, தந்தை, தாய், சமூகம், உறவு, சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை மேம்போக்கு உணர்வாக மாற்றி விட்டது.

இன்று அன்பினால் உண்டாகும் பிணைப்பு அற்றுப் போய் விட்டது. பொருளாதாரமே உறவுகளின் மேம்பாட்டை நிர்ணயிக்கின்றது. முதியோர் இல்லங்கள் ஒரு அத்தியாவசிய அங்கமாக சமுதாயத்தில் இடம் பெற்று விட்டது.

இன்றைய விஞ்ஞானம் மனித குலத்திற்கு மிகுதியாக சௌகரியத்தை தந்திருக்கிறது. சுகங்களை போகங்களை வீட்டு வாசலிலேயே குவிக்கிறது. உண்ணவும், புலன்வழி இன்பத்தை அனுபவிக்கவும் வழிகளை அள்ளி இறைக்கிறது. உடல் உழைப்பைக் குறைக்கிறது, உடல் கெட்டால் மருந்து, மனம் கெட்டால் அதற்கொரு மருத்துவமனை என அத்தனையும் எளிதில் வழங்குகிறது.

இத்தனையும் பெற்றாலும், இத்தகைய நாகரீகத்தின் உச்சத்தை அடைந்த பின்னும் மனிதன் நித்தமும் சுகமாக நிரந்தரமாக இருக்கிறானா? தேடும் அத்தனையும் கிடைத்த பின்னும் சாந்தமும் சந்தோஷமும் அவனுள் நிரந்தரமாக இருக்கிறதா ?

எதையும் நுணுக்கி ஆயும் அறிவு வளர்ந்து விட்டாலும், அனைத்தையும் அறிந்து விட்டதாக அவனால் கூற முடிகிறதா? செய்யும் சாதனைகள் நிரந்தரத் திருப்தியை அளிக்கிறதா?. ஏன் அடுத்தடுத்து மாறி மாறி வேறு வேறு சுகங்கள் தேடிஅலைகிறான்? பின், தன் மணத்தையேத் தேடி காடெங்கும் அலையும் கஸ்தூரி மான் போல் சுற்றி அலைந்து, பின் இறுதியில் தன்னுள்ளேயே தான் தேடும் மணம் இருப்பது உணரும் மான் போல், தானும் தன்னுள்ளே நோக்கத் தொடங்குகின்றான்.

அத்தனையும் முயன்று தீர்த்த பின் மீண்டும் முன்னமே சேர்த்து வைத்த முன்னோரின் அறிவின் தொகுப்பில், தான் தேடும் விடை இராதா என மீண்டும் நோக்குகிறான். வளர்ந்து வீங்கிப்போன மனதின் இம்சை தாளாமல், வேறு வழியின்றி மனதின் மூலமே மார்க்கம் கிட்டாதா? என ஆராயத் தொடங்குகிறான் .

உத்தமமான யோக சாஸ்திரங்கள் தரும் உறுதியான வழிகள் அறிவின் உச்சம் அடையும் போது தெளிவாகப் புரியத் தொடங்குகிறது . அத்தகைய ஞான அறிவை எளிய வழிகளை சுருக்கமாகச் சுருக்கிக், குறளின் குறுக்கத்திலே, கூறிடும் ஞான நூலில் சிறந்த பல நூல்களில் ஒன்று ஔவையின் குறள் .

மனத்தை அறியும் கருவியாகக் கொண்டு, அதன் தன்மைகளையும், மேன்மைகளையும் அறிந்துகொண்டு, வாழ்வின் குறிக்கோளை எய்துவது எப்படி, உடலின் பயன் என்ன, குறிக்கோள் என்ன, வாசியோகநிலை, போன்றவற்றை தத்துவ விசாரம் எனும் முறையில், மிக எளிய முறையில் ஔவையின் ஞானக்குறள் படிப்படியாக விளக்குகிறது .

கூடவே பயணித்துத் துய்க்க வருமாறு வேண்டுகிறேன். உங்களுடனேயே சேர்ந்து யானும் பயிலக் கிட்டிய ஒரு வாய்ப்பாகவே இதை எண்ணுகிறேன் .

இனி அடுத்த அதிகாரத்தின் முதல் குறள், எடுத்த எடுப்பிலேயே சட்டென ‘உடலின் பயன் என்ன?’ என எளிதில் கூறுகிறது. தெரிந்த ஒன்றுதானே என எண்ண வேண்டாம். இந்த உண்மை உடலில் ஊறித் திளைக்க வேண்டும்.

உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம்

உடம்பினில் உத்தமனைக் காண.

(சொற்கள் அத்தனையும் இன்றும் உபயோகத்தில் உள்ள எளிய சொற்களே ,எனவே பதவுரை தேவை இல்லை என நினைக்கிறேன்)

உலகத்தில் இருக்கும் அனைத்துப் படைப்புகளிலும் மிகச் சிறந்த வடிவமைப்புக் கொண்ட, ஒன்றைப் போல் ஒன்றில்லாத, ஒவ்வொன்றும் தனித்திறன் வாய்ந்த, மாறுதல் என்பது தேவைப்படாத ஒரு முழுமையான உயர்தரப் படைப்பு என்றால் அது நமது மனித உடலைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் .?

தனக்குவமை இல்லாதானின் உயரியப் படைப்பு, ஒப்பற்றதாக மட்டும்தானே இருக்க முடியும் ? ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய முழுத்தகவல்களும் இன்னமும் ஆராயப்பட்டு தான் வருகின்றது. இன்னமும் அதைப்பற்றிய முழுத் தகவல்களும், பயன்பாடும் அறிந்ததாகக் கூற முடியாது.

மனித முகத்தில் மட்டும் 14 எலும்புகள் உள்ளனவாம், ஆனாலும் ஒருமுகம்போல் மறுமுகம் இருப்பதில்லையாம். எலும்புகளிலும், பற்களிலும் இரத்தத்திலும் கால்சியம் இருக்கிறது. நரம்புகளிலும், எலும்புகளிலும் பாஸ்பரஸ் உள்ளது. சிவப்பு இரத்த அணுக்களில் இரும்பும், சதைகளில் கந்தகமும், கல்லீரலிலும் இருதயத்திலும் தாமிரமும் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். ஆயினும் சுவை அறிந்து சாப்பிடத்தான் மனிதனிடம் நேரமில்லை. அத்தனை அவசரம். ஆனால் செய்யப் போகும் காரியம் தான் என்னவென்று தெரிவதில்லை. எதை நோக்கிப் போகிறோம் என்றும் புரிவதில்லை .

‘உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு சில வாட்டுகள் இருக்கலாம்’ எனப்படுகிறது. அங்கே மின்வெட்டு வந்தால்தான், நோய்என்பது வருகிறதாம்.

மனித உடலில் நைட்ரஜன் 10 சதவீதமும், ஹைட்ரஜன் 3 சதவிகிதமும், பிராண வாயு 65 சதவிகிதமும், சுண்ணாம்பு 1.5 சதவிகிதமும், கரி 18 சதவிகிதமும், பாஸ்பரம் 1 சதவிகிதமும், பொட்டாசியம் 0.25 சதவிகிதம், குளோரின் 0.15 சதவிகிதமும், சோடியம் 0.9 சதவிகிதமும், மக்னீஷியம் 0.25 சதவிகிதமும், இரும்பு 0.0004 சதவிகிதமும், அயோடின் 0.00004 சதவிகிதமும் அடங்கியுள்ளது என ஏராளத் தகவல் இணையத்தில் பட்டியலிடப் படுகிறது.

உடலில் தசைகள் 42 சதவிகிதமும், எலும்புக்கூடு 16 சதவிகிதமும், தோல் 7 சதவிகிதமும், கொழுப்பு 19 சதவிகிதமும், மூளை 2 சதவிகிதமும், எடையளவு கொண்டதாம் .இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். அத்துணை சீர்மை பெருமை கொண்ட அரிய படைப்பு நமது உடல் .

உடம்பினுள் 96 தத்துவங்கள் இயங்குவதாக சித்தர்கள் அறிவியல் கூறுகிறது. இத்தனை மேன்மை பொருந்திய படைப்பின் பயன்தான் என்ன? ‘புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?’ என்று புலம்புவதுதான் வாழ்வா ?

இத்தகைய உயர் வடிவம் பெற்றதின் பயன் உடம்பினுள்ளே இருக்கும் உத்தமனைக் காண்பதுதான். அந்த உத்தமனின் இருப்பை உணர்வதுதான். திருமூலர் சொன்னது போல்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்

றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

எனவே இவ்வுடம்பினை அடைந்ததின் பயனே, உடம்பினுள் இருக்கும் உத்தமனை காண்பதுவே, நம் அனைவர் உடம்பிலும் இறைவன் இருக்கிறார், ஆனால் நாம் அனைவரும் இறைவன் அல்ல. மனிதனில் இருந்து தேவனாகும் முயற்சியே இவ்வாழ்க்கை.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:58 pm

வீட்டு நெறிப் பால், அதிகாரம் 2 – உடம்பின் பயன்

உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே

யுணர்க உணர்வுடையார்

உடம்பினால் ஏற்பட்ட பயனெல்லாம் அறிவினை உண்டு பண்ணுவதற்கே ஆகும். இதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். என்கிறது இந்தக் குறள். உடம்பில் பல உணர்வு உண்டு. அழியும் உணர்வெது, அறிவுடன் கூடிய அழியா உணர்வெது என உணர்வதே அறிவாகும்.

உடம்பின் பயன், உடம்பினுள் உத்தமனை உணர்வதே என்று இதற்கு முந்தையக் குறளில் பார்த்தோம். இப்போது உடம்பின் பயன் அறிவினை உண்டு பண்ணுவதே என்கிறார் ஔவைப் பிராட்டி. இந்த அதிகாரம் முழுவதும் உடம்பின் பயன் என்ன என்பதை பட்டியலிடுவதேயாகும்.

அறிவு என்பதற்கு இன்னதுதான் பொருள் என்பது நிலையான அர்த்தம் கொண்டு எந்த நாளும் இதுவரை இருந்ததில்லை. அறிவு என்பது அறியப்படுவது, அது அனுபவங்களின் தொகுப்பு மட்டும் இல்லை, அனுபவத்தில் இருந்து அறியப்படுவதுதான் அறிவு.

அதை “அற்றம் காக்கும் கருவி” என்கிறார் திருவள்ளுவர். காலத்துக் காலம் இடத்துக்கு இடம் அந்த அறிவு என்பதன் பொருள் மாறுபட்டே வருகிறது. அது காலம் தோறும் வளர்ந்து கொண்டே வருகிறது. முழுமை பெறுவது இறைநிலை வாய்க்கும் போது மட்டுமே.

நமது தமிழர்தம் பாரம்பரிய மரபில் மட்டும்தான், ஒரு அறிவுள்ள பிராணி, இரண்டு அறிவுள்ள பிராணி எனப் பிரித்துக் கொண்டே போய் மனிதனை ஆறு அறிவுள்ள வாழும் ஜீவன் என்ற பிரிவினை இயம்பப்படுகிறது, இன்னும் ஏழாம் அறிவு எட்டாம் அறிவு என்று இப்போது விவாதம் வளர்ந்து வருகிறது.

இதையே ஆங்கிலத்திலே சொல்லும் போது சிக்ஸ்த் சென்ஸ், செவன்த் சென்ஸ் என்றுதான் கூறுவார்கள் . அவர்களுக்கு அறிவு என்பது புலன் வழிக் கிடைக்கும் சென்ஸ் தான் நமக்கோ புலன்வழிக் கிடைக்கும் சென்ஸ் மட்டும் அறிவு என்பது ஆவதில்லை.

அறிவு என்பது சற்று அதைவிட மேம்பட்டது, என நினைக்கிறோம், அது புலனைவிட வித்தியாசமானது . ஆனால் அறிவு வளர்ந்து கொண்டே வருவது, காலம் மாறும் போது அதுவும் மாறுகிறது.

ஒரு காலத்தில் அரணியக் கட்டையைக் கடைந்து நெருப்பு எடுப்பது மிகப்பெரிய அறிவு எனப்பட்டது, பின்பு இயற்கையில் கிடைக்கும் கல்லைச் செதுக்கிக் கூராக்கி ஆயுதம் செய்வது அறிவாக எண்ணப்பட்டது. ஆயுதம் வைத்து வேட்டையாடுவது அப்போது மிகப்பெரியக் கண்டுபிடிப்பு. பின் கல் ஆயுதமே உணவுக்கு, மனித வாழ்வின் ஆதாரம் ஆக அமைத்தது, கற்கள் கிடைக்கும் இடங்களில் ஆதி மனிதன் பெரும் பாலும் குடியேறினான்..

ஆனால் இன்னமும் ஆயுதம் செய்வது பெரிய அறிவாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆதி மனிதனுக்கு ஆயுதம் அவனுக்கு உணவைப் பெற்றுத் தந்தது. இப்போதோ ஆயுதம் பிறரை அடக்கி ஆளத் தேவைப்படுகிறது.

பின்பு செடி கொடிகளில் இருந்து உணவை சேகரிக்கும் அறிவு போதாமல், தானே விளைவிக்க அறிவு வளர்ந்தது. அத்தகைய அனுபவ அறிவு வேளாண்மை எனப் பெயர் பெற்றது.

அறிவு என்பது காலத்துக்கு காலம் காலம் மாறியே வந்தது. மனிதனின் அறிவு வளர்ச்சி தொடர்ந்து வகுக்கப்பட்டு அது விஞ்ஞானம் என்று மொத்தப் பெயர் பெற்றது. அறிவைத் தேடி ஆய்வுகள் தொடர்ந்தது . அவைகள் அறிவியல் உண்மைகள் என வகுக்கப்பட்டன.

அநேகமாக இதுவரை நிகழ்ந்த அனைத்து ஆய்வுகளும் நம்மைச் சுற்றி இருக்கும், பிரபஞ்சத்தையும், இயற்கையையும் புரிந்து கொள்ளவே நடைபெற்றது. ஏன்? ஏன்? என்று இயற்கையின் அத்தனை செயல்களுக்கும் காரணம் தேடி அவைகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இயற்கையைப் புரிந்து கொள்ளவே இந்த்தனை ஆயிரம் ஆண்டு அறிவுத் தேடலும் பயன்பட்டது. ஆய்வுகள் அத்தனையும் மனிதனைச் சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியே நடைபெற்றன. கண்ணால் காண்பதைப் பற்றியே நடைபெற்றது. எனவே இதுவே பௌதீகம் எனப்பட்டது.

ஆய்வுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகள் அறிவியல் உண்மைகள் எனத் தொகுக்கப்பட்டபோது, அறிவியலில் உண்மையைத் தவிர பொய்யும் உண்டா எனும் கேள்வி எழத்தான் செய்யும். அறிவியல் உண்மைகள் என ஆய்வுக்கு பின் தொகுக்கப்பட்டவை போக இன்னும் ஏராளமான, பிரபஞ்சத்தைப் பற்றிய ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் புராதனமான, பெருவாரியான மக்களால் நம்பப்பட்டு, அனுபோகத்தில் இருந்து வந்த பல நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இதுவரை ஆயிரம் ஆண்டுகளான மனிதகுல வளர்ச்சியால் பெற்ற அறிவைக் கொண்டு ஆய்வின் நியதிக்கு வராத, அல்லது இன்னும் விடை கண்டுபிடிக்க முடியாத பிரபஞ்சத்தைக் குறித்த நம்பிக்கைகள் ஆராயப்படாமலேயே இன்னமும் அறிவியல் முத்திரை தற்கால அறிஞர்களால் பொறிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இப்போது அறிவின்மை, முட்டாள்தனம் என்று உதாசீனப்படுத்தப் படும் பல அறியியல் நம்பிக்கைகள் , காலப்போக்கில் அசைக்க முடியாத தொழில் வாய்ப்புகளையும், மனிகுல வாழ்வின் போக்கையுமே மாற்றக் கூடியதாக அமைத்து விடுகிறது.

உதாரணத்திற்கு, அப்படித்தான் 1875 march 9 இல் அமெரிக்காவில் கிரகாம்பெல் என்பவர், முதல் முதலில் , உள்ளுணர்வின் மூலம் நீண்ட கம்பியை ஒரு முனையை அவரது நண்பரிடம் தந்து மறுமுனையின் மூலம் “Mr WATSON COME HERE PLEASE “, என்று மனித குலம் முதலில் டெலிபோன் மூலம் பேசிய பேச்சைப் பேசினார் .

தூரத்தில் இருப்பவர்க்கு இவர் பேச்சு சரிவரக் கேட்டதும், தன் கண்டுபிடிப்பை மக்களுக்குத் தெரிவிக்க, அரசாங்கத்திற்கு அவர் “நான் தொலைபேசி என்ற கருவியைக் கண்டுபிடித்திருக்கிறேன் அதற்கு படேன்ட் தர வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.

மறுநாள் அமெரிக்க பத்திரிகையில் ஒரு தலையங்கம் வந்தது .

Yesterday We have arrested a fellow attempting to obtain money under false pretences என்று கூறி சிறையில் அடைத்தது மேலும்,” without doubt the man is a fraud and an unscrupulous tricker and must be taught a lesson that the american public is too smart and intelligent to be the victiom of this and similar schemes. Even if this insane idea worked, it would have no practical value other than for circus shows.”

அதாவது இந்த தொலை பேசி பேணும் கண்டுபிடிப்பு, எந்தச் செய்முறை சாத்தியமும் இல்லாத ஒரு கண்டுபிடிப்பு, இது சர்க்கஸில் வேண்டுமானால் பயன் படலாம் நடை முறை வாழ்க்கைக்குப் பயன்படாது என அப்போது கணித்தது அந்தப் பத்திரிக்கை.

ஆனால் இன்று தொலை பேசி இல்லாமல் மனிதனால் இருக்க முடியுமா? செல் போன் கையில் இல்லா விட்டால் அவன் உயிரோடு இருப்பவனாகவே கருதப்படுவதில்லையே? எனவே அறிவு என்பது காலத்துக்குக் காலம் மாறும் ஒன்றாகவே இருக்கிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இன்றுவரை, இயற்கையைப் புரிந்துக் கொள்ளவே செய்யப்படுகின்றன. அதைத் தாண்டி புதியதாக ஒன்றும் அறியப்படுவதில்லை.

மேலும் ஒன்றையும் நினைவு கொள்ள வேண்டும். அறிவு என்பது கல்வி மட்டுமல்ல, புலமை மட்டுமல்ல கல்வி என்பது வள்ளுவர் சொல்வது போல் ஒரு பிறவியில் கற்றது எழும் பிறவி எல்லாம் வருகிறது. ஆனால் அறிவு என்பது எழுகின்ற பிறவி யெல்லாம் மேலும் மேலும் அறிந்து பெறப்படுவது. அது ஒரு குறிக்கோளை நோக்கி வளர்கிறது.

கல்விக்கு குறிக்கோள் இல்லை. கல்வி என்பது பொதுவானது. அது பன்முகம் கொண்டது. ஆனால் அறிவு தனிப்பட்ட மனிதனுக்கு விகிதப்படி அமைவது. தனித்தனி வகைப்பட்டது. அது பொதுவானது அல்ல.

மனிதர்கள் முன்னேறி விட்டார்கள். ஆனால் மனிதன் முன்னேறி விட்டானா? மூளை எத்தனையோ சாதனைகள் புரிகிறது. ஆனால் அது நெஞ்சுக்குள் போகவில்லை, நெஞ்சோடு இயந்த அறிவு உண்டாகவில்லை. உணர்வுடன் கூடிய அறிவு அமையவில்லை. தாவரவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் இன்னம் பிற அறிவியல் அத்தனையும் திணித்தாலும் அது மூளையோடு நின்று விடுகிறது . உணர்வின் ஆழம் போகவில்லை.

வெறும் அறிவானது வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும், பொழிப்புரை, பதவுரை அதன் இசை, யாப்பு இப்படித்தான் உணர்வுடன் கூடாத அறிவு போய்க் கொண்டிருக்கும்.

‘கண்ணினும் செவியுனும் திண்ணினும் உணர்வது’ எனத் தொல்காப்பியர் எனும் பண்டைத் தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த சூத்திரம் போல், உணரும் அறிவு பெறுவதே உடம்பின் பயன் என்கிறார் அவ்வையார்.

உணரும் அறிவு, உணர்வுடன் கூடிய அறிவு. அது இரை தேட மட்டுமல்ல, இறைவனுக்கும் நமக்கும் ஒரு உறவு உண்டாக்கும் அறிவு. அத்தகைய உயர் நோக்கம் கொண்ட, மனிதனின் பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு உயர்த்தக் கூடிய அறிவைப் பெறுதலே இந்த உடம்பைப் பெற்ற பயன்.



இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:58 pm

“ஊனில் உயிரில் உணர்வினில்

நின்ற ஒன்றை உணர்ந்தேனே “

என்று நம்மாழ்வார் புகல்வது போல் ஊனில் உயிரில் மட்டும் இல்லாமல் உணர்வினும் இறையின் இருப்பை உணர்வதே உடம்பைப் பெற்ற பெரும் பயன் என்று முந்தையக் குறளில் பார்த்தோம் .

இந்த உணர்வு என்பது உணர்ச்சி இல்லை. நாம் இனிப்பை உணர்கிறோம், குளிரை உணர்கிறோம், அன்பை உணர்கிறோம், கோபத்தை உணர்கிறோம். அப்படியே அறிவும் உணர்வும் இணைய வேண்டும். இறை உணர்வு என்பது உணர்வாக உடம்பில் கலக்க வேண்டும்.

வேதத்தில் இருந்து கூறப்படும் ‘தத்துவமசி’ போன்ற மகா வாக்கியங்கள் போல் புதுவை அன்னையின் மகா வாக்கியம் ஒன்று உள்ளது. அவர்கள் கூறிய அருளுரையில் இருக்கும் இந்த வாக்கியத்தை மகாவாக்கியமாக நான் மதிக்கிறேன். அது என்னவெனில் ‘அகவுணர்வுகளின் வெளிப்பாடே நம்மை சுற்றிய புறச்செயல்கள்’ என்பதுவே ஆகும் .

இந்த மகா வாக்கியமே நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்துக் காரணங்களுக்கும் தகுந்த ஒரு சரியான காரணத்தை கூற வல்லது ஆகும்.

உண்மையில் எல்லோரும் சொல்வது போலோ அல்லது நினைப்பது போல் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப் பொறுத்தோ ,அல்லது நமது எண்ணங்களை மட்டும் பொறுத்தோ, நமது தேவைகளின் பொறுத்தோ, நமது பிரார்த்தனைகளைப் பொறுத்தோ மட்டும் நமது வாழ்வில் நடக்கும் காரியங்கள் இருப்பதில்லை. நமது அறிவுக்கும் புலமைக்கும், அனுபவத்திற்கும் நடக்கும் காரியங்களுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதில்லை.. இது பல நேரங்களில் நமக்குத் திகைப்பை உண்டாக்குகிறது. காரணக் காரியம் புரியாமல் புலம்புகிறோம்.

ஆனால் உண்மையில் நாம் கொண்டிருக்கும் அக உணர்வின் தன்மையைப் பொறுத்தே வாழ்வின் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. உணர்வு என்பது அறிவு மட்டுமல்ல வேண்டுமானால் அறிவின் விளைவு அதன் நிகழ்வு எனக் கூறலாம்.

எப்படி சந்தோஷமாக எப்போதும் இருப்பது எனத் தெரிந்திருந்தாலும், அந்தத் தெரிந்தது மட்டும் சந்தோசம் ஆகி விடுமா?. சந்தோஷமாக உணரவேண்டும்.

அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது.

எது உணர்கிறது. மூளையா? மனதா?

மனம் தான் உணரவேண்டும். அதற்கு மனத்திற்கு முன்பே சந்தோசம் என்பது என்ன எனத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான்அதை உணரமுடியும். சர்க்கரையின் சுவை முன்பே தெரிந்தால் தான் சர்க்கரையை இனம் காண முடியும். முன்பே தெரிந்தது தான் வாசனை என்பது. அது ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு நாளும் பெறும் அனுபவத்தைச் சேகரம் செய்வது. நமக்கும் இறைக்கும் காலம் காலமாகத் தொடர்பு இருக்கிறது. நம்முள் இறைவன் இருக்கிறான்.

ஔவையும் உடம்பில் இருக்கும் உத்தமனைப் பற்றிக் கூறுகிறார்.

நமது மனம், ஆன்மாவின் இருப்பை உணரும் போது, மனம் உள் நோக்கிக் குவியும் போது, நம்முள் இறை உணர்வு உண்டாகிறது. கோயிலுக்குச் சுற்றுப்பிரயாணம் சென்று சாமியைப் பார்த்து விட்டு, பிரசாதத்தை ருசித்து விட்டு வருவதும், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, அவனே அதுவாகி சாமியைப் பார்ப்பதும் ஒரே ரகமாகி விடுமா. பாவித்தால் தான் பலன் புரியும்.

அக உணர்வை வளர்த்துக் கொள்வதும் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்வதும் மிக முக்கியமானதாகும். நல்ல உணர்வுகள் என்பது அன்பு, பக்தி, சந்தோசம், பரிவு, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம் முதலியவையாகும் .

தீய உணர்வுகள் கோபம், பொறாமை, கருமித்தனம், சுயநலம், தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தல் முதலியவையாகும்.

உணர்வு என்பது மனிதனின் ஆன்மாவிற்கு சொந்தமானது மட்டுமல்ல. ஆன்மாவின் இயல்பே உணர்வு தான் .

பணக்காரனாக வேண்டுமெனில் பணக்காரனாக தன்னை நினைத்தால் மட்டும் போதாது, பணக்காரனாகவேத் தன்னை உணவேண்டும். உணர்வே கனவை மெய்யாக்கும் வல்லமை கொண்டது .

நாம் நம் உணர்வில் செயல் படும் போது மட்டுமே ஆன்மாவின் ஒளி உணர்வின் மேல் படுகிறது. இறையுடன் அறிவும், மனமும் ஒருசேர, எந்தவித வினாவும் இன்றிச் சரண் புகும் மனநிலையில் மட்டுமே நமக்கு இறை உணர்வு ஏற்படும். இது உணர்வதுவே, உணரப்படுவது மட்டுமே, எத்தனை முறை விவரித்தாலும் முழுவதும் கூறி விட்டதாகக் கூற முடியாது.

இனி உடம்பின் பயன் எனும் அதிகாரத்தின் அடுத்தக் குறளைப் பார்ப்போம்.

ஒரு பயவாவ துடம்பின் பயனே

தருபயனாஞ் சங்கரனைச் சார்

ஒப்பற்ற உடம்பைப் பெற்றதன் பயன், அத்தகைய பயன் தரும் உடலைத் தந்த சங்கரனைச் சார் என்கிறார் .

இங்கு ஔவைப் பிராட்டி சங்கரன் எனக் குறிப்பிடுவது இறைவனைத் தானே தவிர சிவபிரானையோ, பரமசிவனையோ அல்ல என நினைக்கிறேன். ஏன் எனில் இது ஞானத்தைக் கூறவந்த குறள், இங்கே துதி பாடுதல் இருக்கத் தேவை இல்லை.

சங்கரன் என்பவர் மங்கலம் தருபவர். சங்கடங்களைத் தீர்ப்பவர், அத்தகைய இறைவனைச் சார்ந்திருப்பதே, உடம்பினைப் பெற்று அதனால் நாம் வாழ்வின் பயன் என்கிறார்.

முதல் குறளில் உடம்பினுள் இருக்கும் உத்தமனைக் காணச் சொன்னார். இரண்டாவது குறளில் உடம்பின் பயன், அதனால் பெற்ற அறிவின் பயன் என்பது, உணர்வதே என்றார். மூன்றாவது குறளில், உடம்பினைப் பெற்றதன் பயன், அத்தகைய உடம்பினைத் தந்த இறைவனைச் சார்ந்தே, உடம்பினால் பெற்ற வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார். இனி அடுத்தக் குறளைப் பார்ப்போம்.

பிறப்பினாற் பெற்ற பயனாவதெல்லாம்

துறப்பதாந தூநெறிக்கட் சென்று

தூநெறிக்கட் = உயர்ந்த நெறிகளில். இந்தப் பிறப்பினால் பெற்ற உடம்பின் பயன் எல்லாம் உடம்பைக் கொண்டு வாழும் வாழ்வில் உயர்ந்த நெறிகளில் சென்று, இந்த உடம்பைத் துறப்பதே ஆகும் என்கிறார் .

இந்த உடம்பு, நமக்கு பேறு அளிக்கும் உடம்பு. இந்த உடம்பின் பயன் பேறு நிலை நோக்கிய வாழ்வினை அறிந்து அதன் வழி நடப்பதே. ஆனால் அத்தகைய பேறு கிடைக்கும் போது இந்த உடம்பை நாம் துறக்கிறோம். சீரும் சிறப்புமாகப், போற்றி வளர்த்த இந்த உடம்பு துறப்பதற்காகவே என்பது நமக்கு தெரிய வேண்டும். உடம்பின் மேல் பற்றுக் கொள்ளக் கூடாது.

பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு போகும் போது, உடம்பைத் துறக்கும் பற்றற்ற நிலை வேண்டும். பழைய சட்டையை, நாம் பெரிதானதும் மாற்றத்தான் வேண்டும். ஆற்றைக்கடக்க ஓடம் தேவைதான்.ஆனால் ஆற்றைக் கடந்ததும் ஓடத்தை கரையில் விட்டு,நாம் மேலே நடக்க வேண்டும். ஓடத்தைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு நடக்கக் கூடாது. உடம்பின் பயன் பெற்றதும் உடம்பினைத் துறக்க வேண்டும். இதுவே இந்தக் குறளில் ஔவை நமக்கு கூறும் செய்தி.

இனி அடுத்தக் குறளை அடுத்ததில் பார்ப்போமா ?

உள்ளும் புறமுமாய் உடலுக்குள் நீ இருந்தது

எள்ளளவும் நான் அறியாதே இருந்தேனே பூரணமே –

பட்டினத்தார்

என்னில் இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ ?

சிவவாக்கியர்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 9:59 pm

‘பிரக்ஞானம் பிரமம்‘ என்கிறது ரிக் வேதம்.

“மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

அஞ்ஞானந்தனை அகல்விக்கும் நல்லறிவே”

என்கிறார் சிவபுராணத்தில் மாணிக்கவாசகர். இத்தகைய ஆதியும் அந்தமும் இல்லாத, எல்லையற்ற அறிவுக்கு அறிவான, பேரறிவின் பேருவமே இறைவனின் இயல்பு.

எந்த வாக்கினாலும், எத்தகைய விரிவுரையாலும், பிற பொருள்களைப் போல் அத்துணை எளிதாக அறிய முடியாத அறிவின் மூலப்பொருளே இறையாகிய பரம்பொருள். அத்தகைய அறிவு, எவ்வாறு உணர்வாகப் பரிமளிக்கிறது என ஓரளவு விரிவாகச் சென்ற பகுதிகளில் பார்த்தோம்.

பரிணாம வளர்ச்சியில் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடப் படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்காகவே அதற்கு உகந்ததாக உலகில் முதலில் தோன்றிய முதுகெலும்புள்ள மீனில் இருந்த, தற்போது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை விலங்குகளும், பறவைகளும் சிறுகச் சிறுக மாறி மாறி தற்போதைய நிலையை அடைந்து தங்களுக்குரிய வாழ்வை வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதகுலம் மட்டும் தனது வேட்டையாடும் அடிப்படைக் குணத்தில், இருந்து இரையை மட்டும் நாடுவதை விடுத்து, மனம் என்னும் வஸ்த்து அதனிடம் இருந்ததால், இந்த உடலினைக் கொண்டு மேலும் மேலும் அறிவதையே வாழ்தலின் பயனாகக் கொண்டு வளர்ந்து வருகிறது பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு உயர்ந்து வருகிறது.

வாழ்தல் என்பது மேலும் மேலும் அறிவதிலேயேக் கழிகிறது. சுவாமி சித்பவானந்தரின் பகுப்புப் படி மனித குலத்தின் வாழ்தல் முறை மூன்று வகைப் படுகிறது.

வென்று வாழ்தல்

வகுத்து வாழ்தல்

வழங்கி வாழ்தல்

அநேகமாக மனிதர்களிலும், விலங்குகளிலும் இதில் இருக்கும் முதல் முறையான ‘வென்று வாழ்தல்’ என்பதே மேலோங்கி இருக்கிறது. அதுவே competion எனப்படுவது, அதையே வாழ்தலின் சாமர்த்தியம் என மேல்நாட்டு மனோபாவ முறை வலியுறுத்துகிறது. இதில் தங்களுக்குத் தருகின்ற மதிப்பை அவர்கள் பிற உயிர்களுக்குத் தருவதில்லை. வெற்றிக்கு மட்டுமே இதில் மதிப்பு, மனிதர்களுக்கு மதிப்பு அல்ல.

பிறரை வென்று வாழ, மற்றவரின் உடமைகளை கவர்ந்து வாழ்தலே மேல் என்று நினைப்பு அவர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அதை கீழ்த் தரமானதாக நமது தத்துவ முறை வலியுறுத்துகிறது. உலகின் இறையின் மற்றையப் படைப்புகளை ஏதேனும் ஒரு வகையில் மடக்கி, அடக்கி தங்கள் நலனுக்காகவும், ஜீவனத்துக்காகவும் பயன்படுத்துதல் இத்தகையோரின் குறிக்கோள் ஆகும் .

அவரவர் வலிமைக்கும், வாய்ப்புக்கும் தக்கபடி பிறர் மீது தங்களது ஆளுகையை செலுத்துவது அவர்தம் இயல்பு. இதனால் உலகே போராட்டம் நிறைந்ததாக ஆகிறது, துன்பம் மிகுகிறது. உலகம் நரகம் ஆகிறது. ஒவ்வெருவரும் அப்படியே தங்கள் இயல்பையே பிரதிபலிக்க முயலும் போது, ஒரு வனத்தின் வாழ்வு உலகின் வாழ்வின் முறையாக மாறிவிடுகிறது.

இத்தகைய வாழ்கை முறையை தான் வாழும் வாழ்வில் எதிர் கொண்டாலும், அதைத் தவிர்த்து ‘வகுத்து வாழ்தல்’ என்னும் வாழ்க்கை முறையில் வாழ்வது அதைவிடப் பன் மடங்கு உயர்வானதாகும்.

இதுவே co-operation எனும் சமுதாய வாழ்க்கை முறையாகிறது. தனி நன்மை கூடவே இதில் பொது நன்மைக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முறையான கட்டுப்பாடு மூலம் தனது நலன் கூடவே பொது நலனுக்கும முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்பும் ஆதரவும் இத்தகைய வாழ்வில் இடம் பெறுகிறது.

தன்னலனும் பொதுநலனும் சமமாகப் பேணப்படுகிறது. இறைவகுத்துள்ள விதிவழி வாழ்க்கை இதுவே ஆகும். இதில் மூளையை விட உணர்வுக்கு மதிப்பதிகம். நாம் வாழும் வாழ்விலேயே சுவர்க்கத்தின் வாழ்க்கை இந்த முறையிலேயே அமைகிறது. வாழ்க்கை சுவர்க்கம் ஆகிறது.

மூன்றாம் முறையான இனிய முறை அதனினும் மேம்பட்டது. அது வாழ்க்கையை வேள்வி ஆக்குகிறது. தன்னையே ஆகுதி ஆக்குகிறது. அதுவே’ வழங்கி வாழ்தல்’ இது self dedicated life எனப்படுவது. இதில் பெறுவதை விடக் கொடுப்பது அதிகம்.

தான் ஈட்டும் பொருள் தனக்காகவென்று அதிகம் இல்லாமல் மிகுதியும் மற்றவர்களுக்காகவே, பொது நலனுக்காகவே இத்தகைய முறையில் செலவிடப் பெறுகிறது. அவர்கள் புரியும் மக்கள் சேவையே ஆண்டவன் சேவையாகிறது. நரர்களைப் பேணுவதே நாராயண வழிபாடு ஆகிறது.

வாழையும் தென்னையும் போல் பெறுவதை விடத் தருவதே அதிகம் ஆகிறது. இத்தகையோர் சமுதாயத்திற்கு வழங்கி வாழ்கிறார்கள். அத்தகைய மகாத்மாக்கள் இவ்வுலகை மேம்படுத்தத், தங்கள் வாழ்க்கையே இறைக்கு வேள்வியாக அளிக்கிறார்கள். அத்தகையவர்களின் எண்ணிக்கை மேன்மேலும் இவ்வுலகில் உயரும்போது இந்த வாழ்க்கை மட்டுமல்ல வாழும் உலகமே சுவர்க்கமாகிறது.

இத்தகைய வாழ்வின் மாற்றங்கள் வாழ்தலின் புரிதலைப் பொறுத்தே மெதுவாக நடை பெறுகிறது. இதுவே மனித வாழ்வின் மேல்நோக்கிய பரிணாம வளர்ச்சி ஆகிறது. இந்த வளர்ச்சியை அடைவதற்கு அறிவின் மேன்பாடு பிறவிகள் தோறும் வாய்க்க வேண்டும்.

முதலில் பிரபஞ்சத்தையும் பிறகு பரம்பொருளையும் அறிவதே அறிவைப் பெறுவதன் பயனாகும். அத்தகைய ஈட்டும் அறிவு அத்தனையும் பிறவிகள் தோறும் சேமிக்கப்பட்டு, அறிவில் தேடுதலுக்கு ஏற்பப் பிறவிகள் அடுத்து அடுத்து ஏற்படுகின்றன. அதிலேயே பல கொடுக்கல் வாங்கல் கணக்குகளும் தீர்க்கப்படுகின்றன. அதன் சமன்பாடு எத்தகையக் கணித நிபுணராலும் தீர்க்க இயலாதது. அதற்குத் தேவை வேறுவகையான கணக்கறிவு.

இவ்வகை அறிவு தர்ஷனங்கள் எனும் அறுவகையில் வகுக்கப்படுகிறது. நியாயம், வைசேஷிகம், மீம்மாம்சம், சாங்கியம், யோகம், வேதாந்தம் எனப் பெயர் பெறுகின்றன. இத்தகைய தர்ஷனங்கள் தரும் அறிவு, அனுபவ வாயிலாகவும், மீண்டும் மீண்டும் அனுபவங்கள் அறிவாகவும், பெற்ற அறிவு மேலும் நல அனுபவங்களைப் பெறவும், மேலும் பாவிக்கப்படும் அனுபவங்கள் நல உணர்வுகளாகவும் மாற்றம் பெறுகிறது.

அத்தகைய நல உணர்வினை அடைய இந்த உடம்பு இல்லாமல் இயலாது என்கிறது உடம்பின் பயன் எனும் அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள்.

குறள் எண் 15

உடம்பினாலன்றி உணர்வு தானில்லை

உடம்பினாலுன்னியதே யாம்
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 10:01 pm

இளமையில் கல் என்றால் இளமையில் “கல்” போல இருக்கவேண்டும் என்றா பொருள் கொள்வோம் “கல்” என்றால் கல்வி பெறு என்றுதானே பொருள் கொள்வோம் .

ஆனால் இளமையில் கல் போல் இருந்த நம்மை நல்ல ஒரு மனிதனாக ,தேர்ந்த ஒரு கலைப் பண்புடைய அழகிய சிற்பம் போல் நம் வாழ்க்கையை அமைப்பதற்கு ,அந்தக் கல்லிலே இருந்த வேண்டாத கல்லின் பகுதியை காலம் என்னும் சிற்பி சிறிது சிறிதுசிறிதாக செதுக்கி ,சிறந்ததொரு வாழ்வியல் சிற்பமாக நமது வாழ்வை மாற்றுகிறது .

தேவை இல்லாததை சிறுகச் சிறுக நீக்குவதாலேயே வாழ்வு சிறப்புடையதாகிறது . தேவையானதை சேர்ப்பதையும், தேவை இல்லாததை நீக்குவதையும் ஒரு நாளைக்கு 21600 முறை மூச்சு என்ற பெயரில் யாரும் சொல்லித்தராமலேயே செய்து வருகிறோம் . .

அங்ஙனமே நமது செயலில் உள்ள மாசுகளையும் , நம்மில் படிந்துள்ள மலங்களையும் நீக்கினால் வாழ்வில் இறையின் இருப்பை உணரலாம் என்கிறது இந்தக் குறள்.



மாசற்ற கொள்கை மனத்திலடைந்தக்கால்

ஈசனைக் காட்டுமுடம்பு

குற்றம், அழுக்கு மலம் கறை, முதலியன இல்லாத கலகமற்றத் தெளிவான, திடமான, சஞ்சலமற்ற நல்லொழுக்கம் கடைப்பிடிக்கும் திண்மையான, ஒருமுகம் படைத்த மனத்தை அடைந்து விட்டால் அதாவது மலமற்ற மாசற்ற மனதைக் கொண்டு, அதன் மூலம் அதைக் கொண்ட இந்த உடல் மூலம் கடவுளைக் காணலாம் என்கிறது இந்தக் குறள்.

ஐம் பொறிகளையும் ,அந்தக் காரணங்களான மனம் சித்தி புத்தி மற்றும் அகங்காரம் எனப்படும் ”நான்” கொண்டும் அறியப்படுவது ‘இகம்’, அதாவது இவ்வுலக வாழ்க்கை சேர்ந்த கூர்த்த ஞானம் கொண்டு ‘பரம்’ உணரப் படுகிறது.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற்ப்பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்

என்கிறது திருமந்திரம். மலம் என்னும் வஸ்த்து இல்லாமல் “இகம்” என்பது இல்லை. நல்லதும் கேட்டதும் கலந்ததே வாழ்க்கை. எந்தகைய இன்பத்திலும், சிறிது துன்பம் உண்டு. வலி இல்லாமல் எந்தச் சாதனையும் இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவையும் அமிர்தமாகவும், மலமாகவும் மாறி மாறி அமைந்து வருகிறது. பிரபஞ்சம் ஓயாமல் மாறி மாறி அமைத்து வருகிறது. நாம் உண்ணும் உணவு, உடல் வளர்ச்சிக்குப் பயன்பட்ட பகுதி அமிர்தமாகவும், பயன்படாத பகுதி மலம் என்றும் வெளியேறுகிறது. மலம் வெளியேறா விட்டால் உடல் நலம் கேடாகும். உண்ட உணவே நஞ்சாகும்.

பருகும் நீர் அமிர்த ரூபம் ஆனது, அதில் பயன்படாத பகுதி சிறுநீர் என வெளியேறுகிறது. காற்று கரிமிலவாயு எனும் மலமாக அது பயன்படுத்தப் பட்ட பிறகு வெளியேறுகிறது. உயிர் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது அமிர்தம், உபத்திரமாக அமைவது மலம்.

அமிர்தத்தை ஏற்றுக் கொண்டு மலத்தை வெளியேற்றுவதன் மூலம் உயிர் வாழ்க்கை உறுதி பெறுகிறது. இயற்கையின் அமைப்பிலே அமிர்தமும் மலமும் இணை பிரியாததுதான். இது போலவே நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து அனுபவங்களிலும், அமிர்தமும், மலமும் கலந்தே மனதில் பதிவாகிறது. அமிர்தத்தை ஏற்று வாழ்வின் மேன்பாடு அமைகிறது. மலம் மனதில் இருந்து வெளியேற்றப் பட வேண்டும்.

வேதாந்தத்தின் கோட்பாடு, மலங்கள் மூன்று என்கிறது. அவை மாயை, கன்மம், ஆணவம். இம் மூன்று மலங்களைப் பற்றி விவரிக்கப் புகின், அது மிக விரிவாகிப் போகும். ஆயினும் மும் மலங்களும் நீக்கப் பட வேண்டியவை. இவை நீங்கினாலேயே இறையின் இருப்பு தெளிவாகும் என்கிறது இந்தக் குறள்.

‘மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ‘ என்று கூறிக் கொண்டு அடுத்தப் பகுதியை விரைவில் பார்ப்போமா ?
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 10:02 pm

நல்லதொரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, எத்தனை வேண்டிய நண்பரோ, அல்லது மகளோ, மனைவியோ எதிரில் வந்து எத்தனைக் கூவிழைத்தும், காதுகளிரண்டும் திறந்தே இருக்கும் போதும் காதில் விழுவதில்லை.

எத்தனையோ முறை கண்கள் இரண்டும் திறந்திருக்கும் போதிலும், ஆழ்ந்த ஒரு சிந்தனையில் தீவிரமாக இருக்கும் போது எதிரில் வந்து நிற்கும் எவரும் கண்ணில் தெரிவதில்லை.

புலன்களுக்கும் மனதிற்கும் தொடர்பில்லாது, புலன்கள் வேலை செய்வதில்லை, மனம் செயல் படவோ ஆன்மாவின் ஒளி அதன் மேல் படவேண்டியிருக்கிறது. உயிர் உடலை விட்டு நீங்கும் போது மனமோ, புலன்களோ வேலை செய்வதில்லை.

உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் நேசத்தினாலேயே, புலன்களினால், தன் மாதிரியாகிய மனம் சித்தி, புத்தி, அகங்காரம் ஆகியவைகளால் உண்டாகும் உணர்வுகள் செயல்படுகின்றன.

குறள் எண் 17

ஓசை உணர்வுகளேல்லாந் தருவிக்கும்

நேசத்தாலாய உடம்பு

இந்தத் தேகமானது ஐம்புலமற்றும், தன் மாத்திரை உணர்வுகளை எல்லாம் உடம்பினுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நேசத்தால் உணர்கிறது என்கிறது இந்தக் குறள்.

மனித சரீரத்தில் இருக்கும் பல உறுப்புகளின் மூலம் மனிதன் பலவற்றையும் உணர்கிறான். இதுவே ஸ்பூர்த்தி எனப்படுகிறது. ஆத்மா என்பது என்ன என்பதை விளக்கும் ஆதிசங்கரர், நமது உடலில் இருக்கும் இந்திரியங்கள் அத்தனையும், எந்தச் சக்தியால் இயங்குகிறதோ, அதற்கு எது மூல சக்தியாக இருக்கிறதோ அதுவே ஆத்மா என்கிறார். அதன் இருப்பிற்குப் பிரத்தியட்சப் பிரமாணம் மரணம் தான் என்கிறார் (அத்தனை உறுப்புகளும், உடலும் சரி வர இருந்தாலும், ஜீவன் இல்லையேல் அத்தனையும் இயங்குவதில்லை.

உயிருக்கும் உடம்பிற்கும் இருக்க வேண்டிய நேசத்தைஉணர்த்துவதே இந்தக் குறளில் வலியுறுத்தப்படும் முக்கிய செய்தி.

உடலின் பயன் என்ற இந்த அதிகாரத்திலே ஔவைப் பிராட்டியார் ஒவ்வொருக் குறளிலும், மிக நுட்பமாக உடலின் பயனை விளக்குகிறார். இந்தக் குறளிலே உடலுக்கும், ஆத்மாவுக்கும் இருக்க வேண்டிய நேசத்தைk கூறுகிறார். அத்தகைய ஆன்ம உணருதல் இருந்தாலே, பிற உயிர்களிடத்தும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வளரும். உடலில் நல உணர்வுகள் மேலோங்கும்.

இவுலகிலே பலரையும் வென்று வாழ்ந்து, செல்வமும் புகழும் சேர்த்து, வாழ்வில் வசதியுடன் வாழ்ந்த ஒருவர், உயிர் நீந்த பின் யம தர்ம ராஜனின் முன் நிறுத்தப்பட்டார்.

வெற்றிகரமாகப் பேரும் புகழும் பெற்று வாழ்ந்ததால், உடலைப் பிரிந்து சென்ற உயிரும் பெருமிதத்துடன் எமனின் கேள்விகளை எதிர்க்கொள்ளத் தயாராக இருந்தது.

ஆனால் அங்கே ஒரே ஒரு சிக்கல் பொய் சொல்ல இயலாது. உண்மையை மட்டுமே சொல்ல முடியும்.

“நீ யாரிடமாவது இதுவரை சுயநலமில்லாத அன்பு செலுத்தி இருக்கிறாயா ?” இது எமனின் முதல் கேள்வி.

இவரின் பதில் “மௌனம்”

“சரி அதுதான் இல்லை, இயற்கையை நேசித்து, இயற்கை எழிலை அனுபவித்து இருக்கிறாயா ?”

“அதற்கு இதுவரை நேரமிருந்ததில்லை” இது இவரின் பதில்.

“சமுதாயத்திற்கு உனது பங்களிப்பு என்ன?”

“எனக்குத்தான் இதுவரை கணக்கற்ற சொத்துச் சேர்த்தேன்”

“வாழ்வில் எப்போதும் நீ சந்தோஷமாக இருந்தாயா?”

“இல்லை என்றும் பதட்டமும் ,பரபரப்புமே”

“நீதான் சந்தோஷமாக இல்லை, உன்னைச் சுற்றி இருந்தவர்களை, உனது நண்பர்களை, சந்தோஷப்படுத்தி இருந்திருக்கிறாயா?”

“இல்லை, அவர்களை பயப்படுத்தி, கீழ்ப்படுத்திக் காரியங்ளைச் சாதித்து வந்தேன்”

“வாழ்வில் என்றாவது வாழ்வின் பயன் என்ன? அதைக் குறித்த ஞானம் என்ன

சிந்தித்திருக்கிறாயா ?”

“இல்லை நேரம் இருந்ததில்லை”

“யாருக்காவது எதிர் பார்ப்பில்லாது உதவியாவது செய்திருக்கிறாயா?”

“நிறையப் பிச்சை அளித்திருக்கிறேன், சுவர்க்கம் கிடைக்குமென்று”

“சித்திர குப்தா ! எங்கே போய் விட்டாய்? நீ என்ன வேலை செய்கிறாய்? இவன் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே? இவன் வாழவே இல்லையே? இவ்வளவு நாள் என்ன செய்தாய்” என்று அலறினார் எமன்.

இது ஒரு கற்பனைக் கதைதான். ஆனால் வாழ்தலில் ஒரு பயன் இருக்கிறது.

இந்த உடலின் பயன் நிச்சயம் தேடி நிதம் சோறு தின்பது மட்டுமல்ல, பிறருக்கு உதவுவது, நேசிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. பியா தேயம், ஸ்ம்விதா தேயம் என்கிறது உபநிஷிதம்.



இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 10:03 pm

இளமையில் கல் என்றால் இளமையில் “கல்” போல இருக்கவேண்டும் என்றா பொருள் கொள்வோம் “கல்” என்றால் கல்வி பெறு என்றுதானே பொருள் கொள்வோம் .

ஆனால் இளமையில் கல் போல் இருந்த நம்மை நல்ல ஒரு மனிதனாக ,தேர்ந்த ஒரு கலைப் பண்புடைய அழகிய சிற்பம் போல் நம் வாழ்க்கையை அமைப்பதற்கு ,அந்தக் கல்லிலே இருந்த வேண்டாத கல்லின் பகுதியை காலம் என்னும் சிற்பி சிறிது சிறிதுசிறிதாக செதுக்கி ,சிறந்ததொரு வாழ்வியல் சிற்பமாக நமது வாழ்வை மாற்றுகிறது .

தேவை இல்லாததை சிறுகச் சிறுக நீக்குவதாலேயே வாழ்வு சிறப்புடையதாகிறது . தேவையானதை சேர்ப்பதையும், தேவை இல்லாததை நீக்குவதையும் ஒரு நாளைக்கு 21600 முறை மூச்சு என்ற பெயரில் யாரும் சொல்லித்தராமலேயே செய்து வருகிறோம் . .

அங்ஙனமே நமது செயலில் உள்ள மாசுகளையும் , நம்மில் படிந்துள்ள மலங்களையும் நீக்கினால் வாழ்வில் இறையின் இருப்பை உணரலாம் என்கிறது இந்தக் குறள்.



மாசற்ற கொள்கை மனத்திலடைந்தக்கால்

ஈசனைக் காட்டுமுடம்பு

குற்றம், அழுக்கு மலம் கறை, முதலியன இல்லாத கலகமற்றத் தெளிவான, திடமான, சஞ்சலமற்ற நல்லொழுக்கம் கடைப்பிடிக்கும் திண்மையான, ஒருமுகம் படைத்த மனத்தை அடைந்து விட்டால் அதாவது மலமற்ற மாசற்ற மனதைக் கொண்டு, அதன் மூலம் அதைக் கொண்ட இந்த உடல் மூலம் கடவுளைக் காணலாம் என்கிறது இந்தக் குறள்.

ஐம் பொறிகளையும் ,அந்தக் காரணங்களான மனம் சித்தி புத்தி மற்றும் அகங்காரம் எனப்படும் ”நான்” கொண்டும் அறியப்படுவது ‘இகம்’, அதாவது இவ்வுலக வாழ்க்கை சேர்ந்த கூர்த்த ஞானம் கொண்டு ‘பரம்’ உணரப் படுகிறது.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற்ப்பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்

என்கிறது திருமந்திரம். மலம் என்னும் வஸ்த்து இல்லாமல் “இகம்” என்பது இல்லை. நல்லதும் கேட்டதும் கலந்ததே வாழ்க்கை. எந்தகைய இன்பத்திலும், சிறிது துன்பம் உண்டு. வலி இல்லாமல் எந்தச் சாதனையும் இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவையும் அமிர்தமாகவும், மலமாகவும் மாறி மாறி அமைந்து வருகிறது. பிரபஞ்சம் ஓயாமல் மாறி மாறி அமைத்து வருகிறது. நாம் உண்ணும் உணவு, உடல் வளர்ச்சிக்குப் பயன்பட்ட பகுதி அமிர்தமாகவும், பயன்படாத பகுதி மலம் என்றும் வெளியேறுகிறது. மலம் வெளியேறா விட்டால் உடல் நலம் கேடாகும். உண்ட உணவே நஞ்சாகும்.

பருகும் நீர் அமிர்த ரூபம் ஆனது, அதில் பயன்படாத பகுதி சிறுநீர் என வெளியேறுகிறது. காற்று கரிமிலவாயு எனும் மலமாக அது பயன்படுத்தப் பட்ட பிறகு வெளியேறுகிறது. உயிர் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது அமிர்தம், உபத்திரமாக அமைவது மலம்.

அமிர்தத்தை ஏற்றுக் கொண்டு மலத்தை வெளியேற்றுவதன் மூலம் உயிர் வாழ்க்கை உறுதி பெறுகிறது. இயற்கையின் அமைப்பிலே அமிர்தமும் மலமும் இணை பிரியாததுதான். இது போலவே நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து அனுபவங்களிலும், அமிர்தமும், மலமும் கலந்தே மனதில் பதிவாகிறது. அமிர்தத்தை ஏற்று வாழ்வின் மேன்பாடு அமைகிறது. மலம் மனதில் இருந்து வெளியேற்றப் பட வேண்டும்.

வேதாந்தத்தின் கோட்பாடு, மலங்கள் மூன்று என்கிறது. அவை மாயை, கன்மம், ஆணவம். இம் மூன்று மலங்களைப் பற்றி விவரிக்கப் புகின், அது மிக விரிவாகிப் போகும். ஆயினும் மும் மலங்களும் நீக்கப் பட வேண்டியவை. இவை நீங்கினாலேயே இறையின் இருப்பு தெளிவாகும் என்கிறது இந்தக் குறள்.

‘மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ‘ என்று கூறிக் கொண்டு அடுத்தப் பகுதியை விரைவில் பார்ப்போமா ?
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by இறையன் Wed Feb 08, 2012 10:04 pm

நல்லதொரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, எத்தனை வேண்டிய நண்பரோ, அல்லது மகளோ, மனைவியோ எதிரில் வந்து எத்தனைக் கூவிழைத்தும், காதுகளிரண்டும் திறந்தே இருக்கும் போதும் காதில் விழுவதில்லை.

எத்தனையோ முறை கண்கள் இரண்டும் திறந்திருக்கும் போதிலும், ஆழ்ந்த ஒரு சிந்தனையில் தீவிரமாக இருக்கும் போது எதிரில் வந்து நிற்கும் எவரும் கண்ணில் தெரிவதில்லை.

புலன்களுக்கும் மனதிற்கும் தொடர்பில்லாது, புலன்கள் வேலை செய்வதில்லை, மனம் செயல் படவோ ஆன்மாவின் ஒளி அதன் மேல் படவேண்டியிருக்கிறது. உயிர் உடலை விட்டு நீங்கும் போது மனமோ, புலன்களோ வேலை செய்வதில்லை.

உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் நேசத்தினாலேயே, புலன்களினால், தன் மாதிரியாகிய மனம் சித்தி, புத்தி, அகங்காரம் ஆகியவைகளால் உண்டாகும் உணர்வுகள் செயல்படுகின்றன.

குறள் எண் 17

ஓசை உணர்வுகளேல்லாந் தருவிக்கும்

நேசத்தாலாய உடம்பு

இந்தத் தேகமானது ஐம்புலமற்றும், தன் மாத்திரை உணர்வுகளை எல்லாம் உடம்பினுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நேசத்தால் உணர்கிறது என்கிறது இந்தக் குறள்.

மனித சரீரத்தில் இருக்கும் பல உறுப்புகளின் மூலம் மனிதன் பலவற்றையும் உணர்கிறான். இதுவே ஸ்பூர்த்தி எனப்படுகிறது. ஆத்மா என்பது என்ன என்பதை விளக்கும் ஆதிசங்கரர், நமது உடலில் இருக்கும் இந்திரியங்கள் அத்தனையும், எந்தச் சக்தியால் இயங்குகிறதோ, அதற்கு எது மூல சக்தியாக இருக்கிறதோ அதுவே ஆத்மா என்கிறார். அதன் இருப்பிற்குப் பிரத்தியட்சப் பிரமாணம் மரணம் தான் என்கிறார் (அத்தனை உறுப்புகளும், உடலும் சரி வர இருந்தாலும், ஜீவன் இல்லையேல் அத்தனையும் இயங்குவதில்லை.

உயிருக்கும் உடம்பிற்கும் இருக்க வேண்டிய நேசத்தைஉணர்த்துவதே இந்தக் குறளில் வலியுறுத்தப்படும் முக்கிய செய்தி.

உடலின் பயன் என்ற இந்த அதிகாரத்திலே ஔவைப் பிராட்டியார் ஒவ்வொருக் குறளிலும், மிக நுட்பமாக உடலின் பயனை விளக்குகிறார். இந்தக் குறளிலே உடலுக்கும், ஆத்மாவுக்கும் இருக்க வேண்டிய நேசத்தைk கூறுகிறார். அத்தகைய ஆன்ம உணருதல் இருந்தாலே, பிற உயிர்களிடத்தும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வளரும். உடலில் நல உணர்வுகள் மேலோங்கும்.

இவுலகிலே பலரையும் வென்று வாழ்ந்து, செல்வமும் புகழும் சேர்த்து, வாழ்வில் வசதியுடன் வாழ்ந்த ஒருவர், உயிர் நீந்த பின் யம தர்ம ராஜனின் முன் நிறுத்தப்பட்டார்.

வெற்றிகரமாகப் பேரும் புகழும் பெற்று வாழ்ந்ததால், உடலைப் பிரிந்து சென்ற உயிரும் பெருமிதத்துடன் எமனின் கேள்விகளை எதிர்க்கொள்ளத் தயாராக இருந்தது.

ஆனால் அங்கே ஒரே ஒரு சிக்கல் பொய் சொல்ல இயலாது. உண்மையை மட்டுமே சொல்ல முடியும்.

“நீ யாரிடமாவது இதுவரை சுயநலமில்லாத அன்பு செலுத்தி இருக்கிறாயா ?” இது எமனின் முதல் கேள்வி.

இவரின் பதில் “மௌனம்”

“சரி அதுதான் இல்லை, இயற்கையை நேசித்து, இயற்கை எழிலை அனுபவித்து இருக்கிறாயா ?”

“அதற்கு இதுவரை நேரமிருந்ததில்லை” இது இவரின் பதில்.

“சமுதாயத்திற்கு உனது பங்களிப்பு என்ன?”

“எனக்குத்தான் இதுவரை கணக்கற்ற சொத்துச் சேர்த்தேன்”

“வாழ்வில் எப்போதும் நீ சந்தோஷமாக இருந்தாயா?”

“இல்லை என்றும் பதட்டமும் ,பரபரப்புமே”

“நீதான் சந்தோஷமாக இல்லை, உன்னைச் சுற்றி இருந்தவர்களை, உனது நண்பர்களை, சந்தோஷப்படுத்தி இருந்திருக்கிறாயா?”

“இல்லை, அவர்களை பயப்படுத்தி, கீழ்ப்படுத்திக் காரியங்ளைச் சாதித்து வந்தேன்”

“வாழ்வில் என்றாவது வாழ்வின் பயன் என்ன? அதைக் குறித்த ஞானம் என்ன

சிந்தித்திருக்கிறாயா ?”

“இல்லை நேரம் இருந்ததில்லை”

“யாருக்காவது எதிர் பார்ப்பில்லாது உதவியாவது செய்திருக்கிறாயா?”

“நிறையப் பிச்சை அளித்திருக்கிறேன், சுவர்க்கம் கிடைக்குமென்று”

“சித்திர குப்தா ! எங்கே போய் விட்டாய்? நீ என்ன வேலை செய்கிறாய்? இவன் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே? இவன் வாழவே இல்லையே? இவ்வளவு நாள் என்ன செய்தாய்” என்று அலறினார் எமன்.

இது ஒரு கற்பனைக் கதைதான். ஆனால் வாழ்தலில் ஒரு பயன் இருக்கிறது.

இந்த உடலின் பயன் நிச்சயம் தேடி நிதம் சோறு தின்பது மட்டுமல்ல, பிறருக்கு உதவுவது, நேசிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. பியா தேயம், ஸ்ம்விதா தேயம் என்கிறது உபநிஷிதம்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன் Empty Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-அண்ணாமலை சுகுமாரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum