தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா

2 posters

Go down

டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  Empty டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா

Post by இறையன் Sat Jun 15, 2013 12:42 pm

ஆர்ச்சேஞ்சல் நகரத்திலிருந்து சோலோவெஸ்க் மடத்திற்கு ஒரு பாதிரியார் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் அந்த ஊரில் இருக்கும் கடவுள் உருவங்களை வணங்குவதற்காகச் செல்லும் நிறைய புனிதப் பயணிகளும் இருந்தார்கள். பயணம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. காற்று சாதாரண அளவிலேயே வீசிக்கொண்டிருந்தது. தட்பவெப்ப நிலையும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. புனிதப் பயணிகளில் சிலர் மேல்தளத்தில் படுத்திருந்தார்கள். சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலரோ கூட்டமாக உட்கார்ந்து ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பாதிரியாரும் மேல் தளத்திற்கு வந்தார். மேலும் கீழுமாக அங்கு நடந்தார். கூட்டமாக சிலர் நின்று, அங்கிருந்த மீன் பிடிக்கும் மனிதர் ஒருவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்பதை அவர் பார்த்தார். அந்த மீனவர் கடலைச் சுட்டிக்காட்டியவாறு என்னவோ கூறிக்கொண்டிருந்தார். பாதிரியார் நின்று, மீனவர் சுட்டிக் காட்டிய திசையைப் பார்த்தார். அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. மாறாக, சூரிய வெளிச்சத்தில் கடல் தகதகத்துக் கொண்டிருந்தது. அந்த மீனவர் என்ன கூறுகிறார் என்பதைக் கேட்க வேண்டும் என்பதற்காக அவர் அந்த மனிதருக்கு அருகில் வந்தார். ஆனால், அந்த மனிதர் அவரைப் பார்த்ததும் தன் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றிவிட்டு அமைதியாக இருந்தார். அவருக்கு முன்னால் நின்றிருந்த மற்றவர்களும் தங்களின் தலையிலிருந்த தொப்பிகளை நீக்கிவிட்டு, மரியாதையாக தலை குனிந்தார்கள்.

""நான் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்குறதுக்காக வரலை, நண்பர்களே!'' பாதிரியார் சொன்னார்: ""இந்த மனிதர் உங்கக்கிட்ட என்ன சொல்லிக்கிட்டு இருக்குறார்ன்றதைக் கேக்குறதுக்குத்தான் நான் வந்தேன்.''

""மீனவர், துறவிகளைப் பற்றி எங்கக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு.'' அங்கிருந்தவர்களில் ஒருவர் சொன்னார். அவர் ஒரு வியாபாரி. அங்கிருந்த மற்றவர்களைவிட அவர் பலசாலியாக இருந்தார்.

""எந்தத் துறவிகள்?'' பாதிரியார் கேட்டார். கப்பலின் ஒரு ஓரப் பகுதிக்குச் சென்ற அவர் அங்கிருந்த ஒரு பெட்டிமீது உட்கார்ந்து கொண்டே கேட்டார்: ""அவர்களைப் பற்றி நானும் தெரிஞ்சிக்க விரும்புறேன். சொல்லுங்க. அங்கே எதை நீங்க கையால சுட்டிக்காட்டினீங்க?''

""அதுவா? அதோ அங்கே தெரியுதே, ஒரு சின்ன தீவு! அதைத்தான்...'' அந்த மனிதர் சொன்னார். வலது பக்கம் தூரத்தில் தெரிந்த ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டியவாறு, அவர் மேலும் சொன்னார்: ""தங்களோட ஆத்ம நலனுக்காக அந்தத் தீவுலதான் அந்தத் துறவிகள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க!''

""அந்தத் தீவு எங்கே இருக்கு?'' பாதிரியார் கேட்டார். ""எனக்கு எதுவும் தெரியலையே?''


""அதோ... தூரத்துல. நான் கையை நீட்டுற பக்கம் பார்த்தா, உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு அந்தச் சிறு மேகக் கூட்டம் தெரியுதா? அதற்குக் கீழே, கொஞ்சம் இடது பக்கம் தள்ளி ஒரு சின்ன இடம் தெரியுதா? அதுதான் அந்தத் தீவு.''


பாதிரியார் கூர்ந்து பார்த்தார். அவருடைய கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருக்கும்  நீர் மட்டும்தான் தெரிந்தது.


""என்னால எதையும் பார்க்க முடியல.'' அவர் சொன்னார்: ""சரி... அங்கே வசிக்கிற அந்தத் துறவிகள் யார்?''

""அவங்க ரொம்பவும் புனிதமானவங்க.'' மீனவர் சொன்னார்: ""அவங்களைப் பற்றி நான் ரொம்ப காலமாகவே கேள்விப்பட்டிருக் கேன். ஆனா, ரெண்டு வருடங்களுக்கு முன்னாடிதான் அவங்களைப் பார்க்கறதுக்கான வாய்ப்பு எனக்கு கிடைச்சது!''

ஒருமுறை மீன் பிடிப்பதற்காகப் போனபோது, இரவு நேரத்தில் தான் அந்தத் தீவில் மாட்டிக்கொண்டதையும், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே தனக்குத் தெரியாமல் போனதையும் அவர் சொன்னார். பொழுது விடிந்தவுடன், அந்தத் தீவில் அவர் நடந்து வரும்போது, மண்ணாலான ஒரு குடிசையை அவர் பார்த்திருக் கிறார். அந்தக் குடிசைக்கு முன்னால் ஒரு வயதான மனிதர் நின்றிருந்திருக்கிறார். தொடர்ந்து வேறு இரண்டு மனிதர்களும் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த மீனவருக்கு உணவளித்து, அவருடைய நனைந்து போன பொருட் களைக் காய வைத்து உதவியிருக்கிறார்கள். பிறகு அவருடைய சேதமடைந்த படகைச் சரி செய்ய உதவியிருக்கிறார்கள்.

""அவங்க எப்படி இருந்தாங்க?'' பாதிரியார் கேட்டார்.


""ஒருத்தர் ரொம்பவும் குள்ளமா இருப்பார். அவரோட முதுகு வளைஞ்சிருக்கும். அவர் பாதிரியார்கள் அணியிற ஆடையை அணிஞ்சிருந்தார். ரொம்பவும் வயதானவர் அவர். அநேகமா அவருக்கு நூறு வயதுக்குமேல் இருக்கும்னு நினைக்கிறேன். அவரோட தாடியில இருக்குற வெள்ளை நிறம் பச்சை நிறமா மாறிக்கிட்டு இருக்குற அளவுக்கு வயதானவர் அவர். ஆனா, எப்பவும் சிரிச்ச முகத்தோடயே இருப்பார். சொர்க்கத்துல இருந்து வந்த ஒருத்தரோட முகம் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு அவர் முகம் எப்பவும் பிரகாசமா இருக்கும். ரெண்டாவது மனிதர் ரொம்பவும் உயரமா இருப்பார். அவரும் ரொம்பவும் வயதானவர்தான். விவசாயிகள் அணியிற கிழிஞ்சிபோன கோட் ஒன்றை அவர் அணிந்திருப்பார். அவரோட தாடி பெருசா, மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்துல  இருக்கும். அவர் ரொம்பவும் பலசாலி. எனக்கு உதவி செய்ய வந்த அவர் என் படகை ஏதோ வாளியைத் தூக்குற மாதிரி அலாக்கா தூக்கி திருப்பிப் போட்டார். அவரும் எப்பவும் கருணைமயமான மனிதரா இருந்தார். எப்பவும் உற்சாகம் ததும்பி வழியும் அவர்கிட்ட மூணாவது மனிதர் நல்ல உயரம். அவரோட தாடி பனி மாதிரி நல்ல வெள்ளை நிறத்தில இருக்கும். அந்த தாடி முழங்கால் வரை தொங்கிக்கிட்டு இருக்கும். அவர் எப்பவும் நிமிர்ந்துதான் நடப்பார். அவரோட புருவங்கள் ரொம்பவும் வளைஞ்சிருக்கும். தன்னோட இடுப்பில் ஒரே ஒரு கம்பளி ஆடையைச் சுற்றியிருப்பார். அதுதான் அவரோட ஆடை அதைத் தவிர, அவர் வேற எதையும் அணியிறதே இல்ல...''

""அவங்க உங்கக்கிட்ட பேசினாங்களா?'' பாதிரியார் கேட்டார்.

""அவங்க பெரும்பாலும் பேசாம அமைதியா இருந்துக்கிட்டுத் தான் எல்லா விஷயங்களையும் செய்றாங்க. அவங்களுக்குள்ளேயே எப்பவாவது கொஞ்சம்தான் அவங்க பேசிக்கிறாங்க. ஒருத்தர் ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்- அந்தப் பார்வையோட அர்த்தம் என்னன்னு மத்தவங்க புரிஞ்சிக்கிறாங்க. நான் மிகவும் உயரமா இருக்குற  மனிதர்கிட்ட, "ரொம்ப காலமா நீங்க இதே தீவுல இருக் கீங்களா?'ன்னு  கேட்டேன். அவர் எதுவும் பேசாமல் அமைதியா இருந்தார். பிறகு என்னவோ முணுமுணுத்தார். அவர் கோபமா இருப்பது மாதிரி எனக்குத் தெரிஞ்சது. ஆனா, ரொம்பவும் வயதான மனிதரா இருந்தவர் அவரோட கையைத் தன் கையில் எடுத்து புன்னகை செய்தார். அவ்வளவுதான்- உயரமான மனிதர் அமைதி ஆயிட்டார். வயதான மனிதர், "எங்கமேல கருணை வைங்க...'ன்னு சொல்லிட்டு புன்னகை செய்தார்.''

மீனவர் பேசிக்கொண்டிருந்தபோது, கப்பல் நகர்ந்து அந்தத் தீவை நெருங்கியிருந்தது.


""அதோ... அந்தத் தீவை கடவுள் அருளால இப்போ நீங்க தெளிவா பார்க்கலாம்.'' வியாபாரி சொன்னார்- தன் கையால் அந்தத் தீவைச் சுட்டிக்காட்டியவாறு.

பாதிரியார் பார்த்தார். அந்தத் தீவு ஒரு கறுப்பான கோடுபோல அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதைச் சிறிது நேரம் பார்த்த அவர் அந்த இடத்தை விட்டு நீங்கி நேராக கப்பலில் இருந்த மாலுமியிடம்  சென்று கேட்டார்.

""அந்தத் தீவோட பேர் என்ன?''

""அந்தத் தீவுக்கு பேரே இல்ல. அந்த மாதிரி இந்தக் கடல்ல நிறைய தீவுகள் இருக்கு.''

""தங்களோட மன மகிழ்ச்சிக்காக அங்கே துறவிகள் வாழ்கிறார்களா என்ன?''


""அப்படித்தான் சொல்றாங்க. ஆனா, அது உண்மையான்னு எனக்குத் தெரியாது. அவங்களைப் பார்த்ததா மீனவர்கள் சொல்றது உண்டு. அவங்க வேணும்னே கயிறு திரிக்கிறாங்கன்னுதான் நான் நினைக்கிறேன்.''

""நான் அந்தத் தீவுக்குப் போய் அந்த மனிதர்கûப் பார்க்க விரும்புகிறேன்.'' பாதிரியார் சொன்னார்: ""அங்கே எப்படிப் போறது?''


""கப்பல் தீவுக்குப் பக்கத்துல போக முடியாது.'' மாலுமி சொன்னார்: ""ஆனா நீங்க ஒரு படகுல பயணம் செய்து அங்கு போகலாம். இந்த விஷயத்தை நீங்க கப்பல் தலைவர்கிட்ட பேசுங்க...''


கப்பல் தலைவருக்கு சொல்லி அனுப்பப்பட, அவர் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.

""நான் அந்தத் தீவுல இருக்குற துறவிகளைப் பார்க்க விரும்புகிறேன்.'' பாதிரியார் சொன்னார்: ""அந்தத் தீவுக்கு படகுல போறதுக்கு வழி இருக்குதா?''


கப்பல் தலைவர் பாதிரியாரின் மனதை மாற்ற நினைத்தார்.

""போகலாம்...'' அவர் சொன்னார்: ""ஆனா, நமக்கு நேரம் நிறைய வீணாகும். உங்க ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்... நீங்க சிரமப்பட்டு போகுற அளவுக்கு அந்த வயதான ஆளுங்க அவ்வளவு பெரிய ஆளுங்க இல்ல. அவங்க சரியான முட்டாள்கள்ன்றதுதான் நான் அவங்களைப் பற்றி கேள்விப்பட்டதுல தெரிஞ்சிக்கிட்ட விஷயம். நாம சொல்றது எதையும் அவங்க புரிஞ்சிக்கப் போறது இல்ல. ஒரு வார்த்தைகூட பேச மாட்டாங்க... சொல்லப்போனா கடலுக்குள்ளே இருக்குற மீனுக்கும் அவங்களுக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்ல.''

""நான் அவங்களைப் பார்க்க விரும்புகிறேன்.'' பாதிரியார் சொன்னார்: ""வீணாகுற நேரத்துக்கும் உண்டாகுற சிரமங்களுக்கும் தரவேண்டிய பணத்தை நான் தர்றேன். தயவு செய்து எனக்கு ஒரு படகை ஏற்பாடு பண்ணித் தாங்க!''

அதற்குமேல் வேறு வழியே இல்லை. உரிய கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மாலுமி கப்பலை தீவு இருக்கும் பக்கம் திருப்பினார். பாதிரியாருக்கு கப்பலின் முன்பக்கத்தில் ஒரு நாற்காலி கொண்டு வந்து போடப்பட்டது. பாதிரியார் அதில் உட்கார்ந்து முன்னால் பார்த்தார். கப்பலில் இருந்த அனைத்துப் பயணிகளும் அந்த இடத்திற்கு வந்து தீவையே வெறித்துப் பார்த்தார்கள். அவர்களில் கூர்மையான பார்வையைக் கொண்டவர்கள் முதலில் தீவில் இருந்த பாறைகளைப் பார்த்தார்கள். பிறகு மண்ணாலான குடிசையைப் பார்த்தார்கள். கடைசியில் ஒரு மனிதனின் பார்வையில் துறவிகள் தெரிந்தார்கள். கப்பலின் தலைவர் ஒரு தூர நோக்கியைக் கொண்டு வந்து அதன் மூலம் பார்த்துவிட்டு, அதை பாதிரியாரிடம் தந்தார்.

""சரிதான்... அந்த மூணு பேரும் கரையில நின்னுக்கிட்டு இருக்காங்க. அந்தப் பெரிய பாறைக்கு கொஞ்சம் தள்ளி வலது பக்கமா...''

பாதிரியார் தூர நோக்கியை வாங்கி அதன் வழியே அந்த மூன்று மனிதர்களையும் பார்த்தார். உயரமான ஒரு மனிதர். சற்று உயரம் குறைவான ஒரு மனிதர். மிகமிக குள்ளமாகவும் முதுகு வளைந்தும் உள்ள ஒரு மனிதர். அவர்கள் மூவரும் கரையில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

கப்பலின் தலைவர் பாதிரியாரைப் பார்த்துச் சொன்னார்: ""இதுக்கு மேல கப்பல் போக முடியாது. நீங்க அங்கே போக விரும்பினா, ஒரு படகுல அங்கே போங்க. நாங்க இங்கேயே இருக்கோம்.''

கயிறு கீழே தொங்க விடப்பட்டது. கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. அப்போது கப்பல் சற்று குலுங்கியது. படகொன்று கீழே விடப்பட்டது. படகோட்டிகள் படகுக்குள் குதித்து உட்கார்ந்தார்கள். பாதிரியார் படிகள் வழியாக இறங்கி படகில் போய் உட்கார்ந்தார். படகோட்டிகள் துடுப்புகளைப் போட, படகு படு வேகமாக தீவை நோக்கி நகர ஆரம்பித்தது. கல்லெறியும் தூரத்தில் வந்தவுடன், அவர்கள் அந்த மூன்று வயதான மனிதர்களையும் பார்த்தார்கள். இடுப்பில் ஒரு கம்பளி ஆடையை மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு உயரமான மனிதர், கிழிந்துபோன விவசாயிகள் அணியும் ஆடையை அணிந்திருக்கும் குள்ள மனிதர், பழைய அங்கி ஒன்றை அணிந்த வயதால் முதுகு வளைந்த முதிய மனிதர்- மூவரும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

படகோட்டிகள் கரை வந்தவுடன், படகை நிறுத்தினார்கள். பாதிரியார் படகை விட்டுக் கீழே இறங்கினார்.

அந்த வயதான மனிதர்கள் அவரைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு வணங்கினார்கள். அவர் அவர்களுக்கு தன்னு டைய ஆசீர்வாதத்தைத் தர, அவர்கள் மேலும் குனிந்து வணங்கி னார்கள். பிறகு பாதிரியார் அவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

""நான் கேள்விப்பட்டேன்.'' அவர் சொன்னார்: ""உங்களை நீங்களே பார்த்துக்கிட்டு நம்மோட கடவுள் இயேசுவிடம் மற்ற மனிதர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்கள் என்று. நான் கடவுளோட ஒரு சாதாரண வேலைக்காரன். கடவுளோட கருணை யால் மக்கள் கூட்டத்திற்கு போதனைகள் செய்றதுக்காக அனுப்பப் பட்டவன் நான். கடவுளோட வேலைக்காரர்களான உங்களை நான் பார்க்க விரும்பினேன். உங்களுக்கு நான் ஏதாவது சொல்லித்தர விரும்புகிறேன்.''

அந்த வயதான மனிதர்கள் தங்களைத் தாங்கள் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்களே தவிர, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

""சொல்லுங்க.'' பாதிரியார் சொன்னார்: ""உங்க ஆன்மாவைக் காப்பாத்துறதுக்கு நீங்க என்ன செய்றீங்க? இந்தத் தீவுல நீங்க கடவுளுக்கு எப்படி சேவை செய்றீங்க?''


இரண்டாவது துறவி வெட்கத்துடன் மிகவும் வயதான துறவியைப் பார்த்தார். பிறகு அவர் சிரித்தவாறு சொன்னார்:

""கடவுளுக்கு எப்படி சேவை செய்யிறதுன்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்துக்குவோம். துணையாய் இருப்போம். அவ்வளவுதான்.''


""கடவுள்கிட்ட எப்படி பிரார்த்தனை செய்வீங்க?'' பாதிரியார் கேட்டார்.


""நாங்க இப்படித்தான் பிரார்த்தனை செய்வோம்.'' அந்தத் துறவி சொன்னார்: ""நீங்க மூணு பேரு, நாங்க மூணு பேரு. எங்கமேல கருணை காட்டுங்க...''


அந்தத் துறவி இதைச் சொன்னதும், மூன்று துறவிகளும் தங்களின் கண்களை சொர்க்கத்தை நோக்கி உயர்த்தி திரும்பச் சொன்னார்கள்:


""நீங்க மூணு பேரு, நாங்க மூணு பேரு. எங்கமேல கருணை காட்டுங்க.''


அதைப் பார்த்து பாதிரியார் புன்னகைத்தார்.


""நீங்க எல்லாருக்கும் கேட்கும்படி கடவுளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்றீங்க.'' அவர் சொன்னார்:  ""ஆனா, நீங்க சரியா பிரார்த்தனை பண்ணல. நீங்க என் அன்புக்கு பாத்திரமா ஆயிட்டீங்க. கடவுளோட மக்களே! கடவுள் சந்தோஷப்படுற மாதிரி ஏதாவது சொல்ல விரும்புறீங்க. ஆனா, அவருக்கு எதைச் சொல்றதுன்னு உங்களுக்குத் தெரியல. அப்படி பிரார்த்தனை பண்ணக் கூடாது. என்னையே பாருங்க. நான் உங்களுக்கு எப்படி பிரார்த்தனை பண்றதுன்றதை கற்றுத் தர்றேன். நான் என் சொந்த வழிமுறைகளை உங்களுக்குச் சொல்லித் தரல. எல்லாரும் தன்னை எப்படி வணங்கணும்னு புனித நூல்ல கடவுள் சொல்லியிருக்கிறாரோ, அதைத்தான் உங்களுக்கு நான் சொல்லித் தரப் போகிறேன்:''


தொடர்ந்து கடவுள் மனிதர்களிடம் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொண்டார் என்பதை பாதிரியார் விளக்க ஆரம்பித்தார். தந்தை வடிவில், மகன் வடிவில், புனித ஆவி வடிவில் வந்த கடவுளைப் பற்றி அவர் அவர்களிடம் சொன்னார்.

""மகன் வடிவில் கடவுள் பூமிக்கு வந்தார்.'' அவர் சொன்னார்: ""மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக... இப்படித்தான் தன்னை பிரார்த்தனை செய்யணும்னு நம்ம எல்லாரையும் பார்த்து அவர் சொன்னார். என்னையே பாருங்க... நான் சொல்றதை அப்படியே திருப்பிச் சொல்லுங்க.. நம் தந்தை...''

இருப்பதிலேயே வயதில் மூத்தவராக இருந்த மனிதர் பாதிரியார் சொன்னதைத் திரும்பச் சொன்னார்: ""நம் தந்தை''. இப்போது அதற்கடுத்து வயதான மனிதர் சொன்னார்: ""நம் தந்தை'': மூன்றாவது மனிதர் அதற்கடுத்து சொன்னார்: ""நம் தந்தை.'' 

""சொர்க்கத்தில் இருக்கும்...'' பாதிரியார் தொடர்ந்து சொன்னார்.

முதல் துறவி அவர் சொன்னதைத் திரும்பச் சொன்னார்: ""சொர்க்கத்தில் இருக்கும்...'' ஆனால், அந்த வார்த்தைகளை இரண்டாவது துறவியால் சரியாகச் சொல்ல முடியவில்லை. வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் அவர் தடுமாறினார். அவருடைய வாய்க்கு மேலே முடி வளர்ந்திருந்ததால், அவரால் எதையும் ஒழுங்காகப் பேச முடியவில்லை. மிகவும் வயதான துறவிக்கு வாயில் பற்களே இல்லாததால், அவர் இப்படியும் அப்படியும் மென்று கொண்டிருந்தாரே தவிர, வார்த்தைகளே வெளியே வரவில்லை.

பாதிரியார் மீண்டும் தன்னுடைய வார்த்தைகளைச் சொன்னார். அந்த வயதான மனிதர்கள் அவர் சொன்னதைத் திரும்பச் சொன்னார்கள். பாதிரியார் அங்கிருந்த ஒரு கல்மீது உட்கார்ந்திருக்க, அந்த வயதான மனிதர்கள் அவருக்கு  முன்னால் நின்றிருந்தார்கள். அவர்கள் அவருடைய வாயையே உற்றுப் பார்த்தவாறு, அவர் சொன்ன வார்த்தைகளை திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். அந்த முழு நாளும் பாதிரியார் மிகவும் கஷ்டப்பட்டு அந்த வார்த்தைகளை அவர்களுக்கு கற்றுத் தந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வார்த்தையும் இருபது முறை, முப்பது முறை, ஏன்... நூறுமுறைகள் கூட திரும்பத் திரு:மப அவர் கூறிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதை அந்த வயதான மனிதர்கள் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் தடுமாற, பாதிரியார் அவர்களைத் திருத்தி, மீண்டும் ஆரம்பத்திலிருந்து கூறிக் கொண்டிருந்தார்.

கடவுளின் பிரார்த்தனையை அவர்களுக்கு முழுமையாக அவர் கற்பிக்க, அவர்கள் அதைத் திரும்பச் சொல்ல... அவர்களாகவே அதைக் கூறும் வரை பாதிரியார் அவர்களை விடவில்லை. இரண்டாவது துறவிதான் அவர் சொன்ன அந்த பிரார்த்தனை வார்த்தைகளை சரியாகப் புரிந்துகொண்டு, அதை முழுமையாக எந்தவித தவறும் இல்லாமல் திரும்பக் கூறினார். பாதிரியார் அவரைத் திரும்பத் திரும்ப அதைக் கூற வைத்தார். கடைசியில் மற்ற இருவரும்கூட அதை முழுமையாகக் கூறினார்கள்.

நேரம் இருட்டிவிட்டது. நீரில் நிலவு தெரிந்தது. பாதிரியார் தன்னுடைய கப்பலுக்குச் செல்வதற்காக எழுந்து நின்றார். அந்த வயதான மூவரையும் விட்டுப் பிரிவதற்காக அவர் தயாரானபோது, அவர்கள் தரையில் விழுந்து அவரை வணங்கினார்கள். அவர் அவர்களை எழுப்பி, அவர்கள் ஒவ்வொருவரையும் முத்தமிட்டார். தான் சொல்லிக் கொடுத்ததைத் கூறி இறைவனை பிரார்த்தனை செய்யும்படி அவர் கூறினார். பிறகு படகில் ஏறி அவர் கப்பலுக்குத் திரும்பினார்.

படகில் ஏறி உட்கார்ந்து கப்பலை நோக்கி அவர் பயணம் செய்து கொண்டிருக்க, கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்யும் வார்த்தைகளை அந்த மூன்று வயதான துறவிகளும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருப்பது அவருடைய காதுகளில் விழுந்தது. படகு கப்பலை நெருங்கும்போது, அவர்களின் குரல் முழுமையாகக் கேட்கவில்லை. ஆனால், நிலவு வெளிச்சத்தில் அவர்கள் நின்று கொண்டிருப்பது நன்கு தெரிந்தது. அவர்கள் பாதிரியார் அங்கிருந்து புறப்படும்போது எந்த இடத்தில் நின்றிருந்தார்களோ, அதே இடத்தில்தான் இப்போதும் நின்றிருந்தார்கள். குள்ளமானவர் நடுவில் நின்றிருந்தார். உயரமானவர் வலது பக்கம் நின்றிருக்க, இரண்டாமவர் இடது பக்கத்தில் நின்றிருந்தார். பாதிரியார் கப்பலை அடைந்து அதில் ஏறியவுடன் கப்பல் புறப்படுவதற்கு ஆயத்தமானது. எல்லா விஷயங்களும் தயார் செய்யப்பட்டவுடன் காற்று பலமாக வீச கப்பல் புறப்பட்டது. பாதிரியார் மேல் தளத்தில் பின்னாலிருந்த ஒரு இடத்தில் போய் அமர்ந்து, அந்தத் தீவையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது தூரம் வரை அந்த வயதான துறவிகள் அவருக்குத் தெரிந்தார்கள். பிறகு அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து போனார்கள். ஆனால், தீவு மட்டும் தெரிந்தது. கடைசியில் தீவும் பார்வையிலிருந்து மறைந்தது. கடல் மட்டுமே சுற்றிலும் தெரிந்தது. நிலவு வெளிச்சத்தில் அது "தகதக'வென மின்னிக் கொண்டிருந்தது.

கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த புனிதப் பயணிகள் படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். சுற்றிலும் பயங்கர அமைதி நிலவியது. பாதிரியார் தூங்க விரும்பவில்லை. ஆதலால், தான் மட்டும் தனியே அதே இடத்தில் அமர்ந்து கடலை மட்டும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். தீவு முற்றிலுமாக பார்வையிலிருந்து மறைந்து போனாலும்,  அவருடைய சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்கள் அந்த மூன்று நல்ல வயதான மனிதர்களும். கடவுளைப் பற்றிய பிரார்த்தனையைக் கற்றுக் கொள்வதில் அவர்களுக்கிருந்த சந்தோஷத்தை அவர் நினைத்துப் பார்த்தார். தன்னை அந்த வயதான மனிதர்களிடம் அனுப்பி வைத்து பிரார்த்தனை வார்த்தைகளைக் கற்றுத் தருவதற்கான வாய்ப்பைத் தந்ததற்காக கடவுளுக்கு அவர் நன்றி கூறினார்.

பாதிரியார் அமர்ந்து, சிந்தித்தவாறு தீவு மறைந்துபோன திக்கையே பார்த்துக்கொண்டிருந்தார். நிலவு வெளிச்சம் கடல் அலைகளுக்கு மேலே இங்குமங்குமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று நிலவு பட்டு கடலில் நீளமாகத் தெரிந்த ஒளிமயமான கோட்டில், ஏதோ வெள்ளை நிறத்தில் பிரகாசமாகத் தெரிவதை அவர் பார்த்தார். அது ஏதாவது கடல் வாழ் பிராணியா இல்லாவிட்டால் பயணம் செய்து கொண்டிருக்கும் ஏதாவதொரு படகிலிருந்து உண்டாகும் வெளிச்சமா என்று அவர் பார்த்தார். பாதிரியார் அந்த வெளிச்சம் வரும் திசையையே வியப்புடன் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்.

"நமக்குப் பின்னாடி வந்துக்கிட்டு இருக்குற ஒரு படகாத்தான் அது இருக்கும்.' அவர் நினைத்தார்: "ஆனா, அது நம்மைவிட படுவேகமா வர்றது மாதிரி இருக்கே! ஒரு நிமிடத்துக்கு முன்னாடி அந்த வெளிச்சம் எங்கோ தூரத்தில் தெரிந்தது. இப்போ ரொம்பவும் பக்கத்துல தெரியுது. நிச்சயம் அது படகா இருக்குறதுக்கு வாய்ப்பில்ல. பாய்மரம் எதுவும் கண்ணுல தெரியலியே! அது வேகமா நம்மைத் தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரமே பிடிச்சிடும்போல இருக்கே!'

அவரால் அது என்னவென்று கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது ஒரு படகாக இருக்காது! பறவையும் இல்லை! மீனும் இல்லை! ஒரு மனிதனைவிட மிகவும் பெரியதாக இருந்தது அது! தவிர, ஒரு மனிதன் கடலின் மையப்பகுதியில் எப்படி இருக்க முடியும்? பாதிரியார் எழுந்து, மாலுமியைப் பார்த்துக் கூறினார்.

""அங்கே பாருங்க... அது என்ன? நண்பரே! ம்... அது என்ன?'' பாதிரியார் தான் சொன்னதையே திரும்பவும் சொன்னார். இப்போது அது என்ன என்று அவருக்குத் தெளிவாகவே தெரிந்தது. அந்த மூன்று வயதான துறவிகளும் நீருக்குமேலே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் வெள்ளை நிறத்தில் ஒளிமயமாகத் தெரிந்தவர்கள். அவர்களுடைய சாம்பல் நிற தாடி ஒளிர்ந்து கொண்டிருந்தது. கப்பலை படுவேகமாக அவர்கள் நெருங்கி வந்தார்கள்.

மாலுமி அவர்களைப் பார்த்து, உண்மையிலேயே பதைபதைத்துப் போனார்.


""ஓ... கடவுளே! துறவிகள்தான் நம்மைத் தொடர்ந்து ஏதோ கட்டாந்தரையில் ஓடிவர்ற மாதிரி நீருக்குமேலே ஓடி வர்றாங்க.'' பாதிரியார் சொன்னார்.

கப்பலிலிருந்து மற்ற பயணிகள் பாதிரியார் சொன்னதைக் கேட்டு உற்சாகத்தில் குதித்து, கப்பலில் பின்பகுதிக்கு வந்து கூடினார்கள். அந்த வயதான துறவிகள் ஒருவர் கையை இன்னொருவர் கோர்த்துக் கொண்டு நீரின்மீது ஓடி வருவதை அவர்கள் பார்த்தார்கள். உயரமான இரு துறவிகளும் கப்பலை நிறுத்தும்படி சைகை செய்தார்கள். அவர்கள் மூவரும் கால்பாதங்களை அசைக்காமலே நீரில் வழுக்கிக் கொண்டு  வந்தார்கள். கப்பலை நிறுத்துவதற்கு முன்பே, துறவிகள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள்  தங்களின் கைகளை உயர்த்தி ஒரே             குரலில் சொன்னார்கள்.

""நாங்க நீங்க சொல்லிக் கொடுத்ததை மறந்துட்டோம். கடவுளின் பணியாளே! நாங்க திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தது வரை, அந்த வார்த்தைகள் எங்க ஞாபகத்துல இருந்துச்சு. கொஞ்ச நேரம் அதைச் சொல்லாம நிறுத்தினோம்... அவ்வளவுதான்... ஒரே ஒரு வார்த்தை மறந்தது... அதுக்குப் பின்னாடி எல்லா வார்த்தைகளுமே எங்களுக்கு மறந்து போச்சு. இப்போ எங்க ஞாபகத்துல எதுவுமே இல்லை. எங்களுக்கு திரும்பவும் சொல்லித் தாங்க.''

பாதிரியார் தனக்குத் தானே சிலுவை இட்டுக்கொண்டு 

கப்பலில் சாய்ந்தவாறு சொன்னார்:


""உங்க சொந்த பிரார்த்தனையே கடவுளிடம் உங்களைக் கொண்டு போய் சேர்த்திடும். கடவுளின் மனிதர்களே! நான் உங்களுக்கு சொல்லித் தர்றதுக்கு எதுவுமே இல்ல. பாவிகளான எங்களுக்காக பிரார்த்தனை பண்ணுங்க!''


பாதிரியார் அந்த வயதான மனிதர்களுக்கு முன்னால் தலை குனிந்து நின்றார். அவர்கள் திரும்பி, கடல்மீது மீண்டும் நடந்தார்கள். அவர்கள் பார்வையை விட்டு மறைந்த இடத்தில், பொழுது புலரும் நேரத்தில் ஒரு ஒளி பளிச்சிட்டது.


நன்றி நக்கீரன் 
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா  Empty Re: டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா

Post by கே இனியவன் Thu Aug 28, 2014 10:00 am

Cool Cool Cool

கே இனியவன்

Posts : 10
Join date : 28/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum